
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இதுவரை 1.15 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர்.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் நிறைவடையவில்லை. வரும் நவம்பர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளதால் நீங்கள் அதுவரை விண்ணப்பிக்கலாம்.
கடந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுப்பட்டவர்கள், எல்லா தகுதிகளும் இருப்பவர்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் என அனைவரும் இப்போது விண்ணப்பிக்கலாம். மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகள் தளர்வுகளின்படி, புதிதாக தகுதி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
விரைவில் தகுதி வாய்ந்த பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மகளிர் உதவித்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தவறாக தகவல்களை கொடுப்பவர்கள், குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக நிராகரிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் கார்டு, வங்கி கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் முக்கியமானதாகும். இவை அனைத்தையும் சரியாக கொடுத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று தவறாக இருந்தாலும் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால் உங்களுக்கு தெரியாத புதுத்தகவல் என்னவென்றால் தனியாக வசிக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்றால் கிடைக்கும்.
ஆனால், அந்த பெண்ணிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். இதுவரை ரேஷன் கார்டு இல்லையென்றாலும் பரவாயில்லை. உடனே தனியாக வசிக்கிறேன் என்பதற்கான மனு கொடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது குறைதீர் முகாம்களில் நேரடியாக சென்றும் முறையிடலாம்.
அதன்படி உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைத்த பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பயன்பெற ரேஷன் கார்டு தான் அடிப்படையே. தகுதி வாய்ந்த பெண்கள் யாராக இருந்தாலும் ரேஷன் கார்டு இருந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்தால் கட்டாயம் உங்களுக்கு ரூ.1000 கிடைக்கும்.