

சமீபத்திய சோதனையில், கர்நாடக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 7000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஹெச்ஐவி (HIV) தொற்று இருப்பது உறுதிப் செய்யப்பட்டது. இந்த செய்தி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு(NACO) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த மாநிலத்தில் உள்ள 18 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த நோய் தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தரவுகள் வெளியாகி கர்நாடக மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு, கர்நாடகா முழுவதும் உள்ள, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹெச்ஐவி பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் சுமார் 2,60,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனாலும் அதில் 2,05,000 பேர் மட்டுமே இதற்கான உரிய சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். சுமார் 54,000 பேருக்கும் மேல் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். கர்நாடக சுகாதாரத்துறை மற்றும் தேசிய சுகாதாரக் துறைக்கு விடப்பட்ட சவாலாக இருக்கிறது. இந்த தகவலை மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கம் உறுதி செய்துள்ளது.
தற்போது கர்நாடகா முழுக்க இளம் வயதினருக்கு ஹெச்ஐவி தொற்று அதிகம் பரவி வருகிறது. பெரும்பாலும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம் இத்தொற்று அதிகரித்து வருவது மாநில சுகாதாரத் துறைக்கே பெரிய தலைவலியாக இருக்கிறது.
சில தரவுகளின் அடிப்படையில் இந்த வயதினரிடையே பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 44,500 ஆக இருந்தது. தற்போது 2025-26 ஆம் ஆண்டில் 66,600 ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையைக் கண்டு மாநில அரசு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் எச்.ஐ.வி பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து மேலும் நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க விழிப்புணர்வு முகாம்களையும் அரசாங்கம் நடத்துகிறது. இந்த நோய் தொற்று பரவலைத் தடுத்து தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் அளிக்கும் நோக்கில்மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே நேரம் ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் தனியுரிமை மற்றும் உரிமைகளுக்கு முழு மதிப்பளிக்கும் வகையிலும் , தனிநபர் அனுமதியின்றி எந்த ஒரு பரிசோதனையும் செய்யப்படாது என்று அரசு உறுதியளித்துள்ளது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள், பலரும் பயன்படுத்திய போதை ஊசிகளை பகிர்ந்து கொள்ளுதல் மூலம் அதிகமாக ஹெச்ஐவி தொற்றுகள் பரவுகின்றன. இது குறித்த போதிய விழிப்புணர்வு இளைய தலைமுறையினர் மத்தியில் இல்லாததால் ,இந்தத் நோய் தொற்று விரைவாகப் பரவுகிறது.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இளைஞர்களிடையே ஹெச்ஐவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரிசோதனை மையங்களை எளிதில் அணுகவும் பிரத்யேக கியூஆர் குறியீடுகள் (QR Code) உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இதை ஸ்கேன் செய்து, அருகிலுள்ள பரிசோதனை மையங்களை அணுகி தேவையான மருத்துவ உதவிகளை ரகசியமாக பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.