

தமிழ்நாட்டில் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது, கைபேசி வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசியில் பேசக் கூடாது என்ற உத்தரவு மட்டுமே இருந்தது.
இந்நிலையில் தற்போது கைபேசியை சட்டை பையில் கூட வைத்திருக்கக் கூடாது என போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது. வழித்தட ஆய்வின் போது, பேருந்து ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருப்பதைக் கண்டறிந்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விபத்துகளைத் தடுக்கவே இந்த அதிரடி தடையை கொண்டு வந்துள்ளது போக்குவரத்து கழகம்.
அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் கைபேசிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கைபேசி பார்ப்பதற்கோ அல்லது பேசுவதற்கோ மட்டுமின்றி தனது சட்டைப் பையில் கூட வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் தங்களுடைய கைபேசியை சுவிட்ச் ஆப் செய்தோ அல்லது சைலன்ட் மோடை ஆன் செய்தோ, சீட்டிற்கு அடியிலோ அல்லது பேருந்தில் பாதுகாப்பான இடத்திலே வைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் ஓட்டுநர்கள் பணியின் போது, தங்களுடைய னகபேசியை நடத்துநரிடம் கொடுத்து விடலாம்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் திடீரென பேருந்தில் வழித்தட ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். அந்த சமயத்தில் ஓட்டுநரிடம் கைபேசி இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
ஓட்டுநரின் சட்டைப் பாக்கெட்டில் மொபைல் போன் இருக்கும் போது, அதில் வரும் அழைப்புகள் அல்லது மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என ஓட்டுநர் ஒரு நொடி திசை திரும்பினாலும் கூட, விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கவே இந்த தடையைப் பிறப்பித்துள்ளது போக்குவரத்துக் கழகம்.
குடும்பத்தாரோ அல்லது உயர் அதிகாரிகளோ ஓட்டுநரை அவசரமாக தொடர்பு கொள்ள நினைத்தால், பேருந்தின் நடத்துநரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு உடனடியாக நடத்துநர், ஓட்டுநருக்கு அந்தத் தகவலை தெரிவிப்பார்.
இதன்மூலம் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.