#BIG NEWS : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு-மீட்பு பணிகள் தீவிரம்..!

மலப்புரம் - வயநாடு மாவட்டங்களை இணைக்கும் திட்டப்பகுதியில் மீனாட்சி பாலம் அருகே சரிந்த மலை; 5 பேர் மீட்பு, NDRF மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிர அதிரடி ஆபரேஷன்!
வயநாடு நிலச்சரிவு
வயநாடு நிலச்சரிவுSOURCE: indian express
Updated on

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில், மீனாட்சி பாலம் அருகில் சுரங்கப் பாதை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக அஞ்சப்படுகிறது.

மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில் கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை கட்டுமான பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததால், பலர் இடிப்பாடுகளிலும், நிலத்தடியில் வாகனங்களும் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 5 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் டி. சித்திக் உத்தரவிட்டுள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிலர் மண்ணுக்குள் புதைந்ததாக அச்சம் நிலவுகிறது. 

மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கோம்போயில் - மேப்பாடி சுரங்கப்பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு சம்பவம் நடைபெற்றுள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து கல்பெட்டாவைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRE) குழுக்களால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுரங்கப்பாதை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் சில வாகனங்கள்  நிலச்சரிவில் சேதம் அடைந்ததாலும், பணித்தளத்தின் ஒரு பகுதி புதைந்ததாலும் மீட்பு குழுக்கள், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

வயநாடு நிலச்சரிவு
வயநாடு நிலச்சரிவு

சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து உள்ளூர்மக்கள் உதவியுடன் இதுவரை ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் சில வீடுகளும் தங்கும் விடுதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆனக்கோம்போயில் - மேப்பாடி சுரங்கப்பாதை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கேரளா அமைச்சர் டி. சித்திக் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்தில் தேடுதல் பணிகளை ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு, வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டது. அதீதமான மழைப்பொழிவால் தாங்கு திறனை இழந்த மலை உச்சியில் இருந்து சிறுசிறு மண் சரிவுகள் ஏற்பட்டு, அவை ஓரிடத்தில் ஒன்றாகத் தேங்கி அணைக்கட்டு உடைப்பைப் போன்று இரண்டு அல்லது மூன்று முறை ஏற்பட்டு வேறு பேரழிவுக்கு வித்திட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. கற்பனைக்கும் எட்டாத அளவிலான ராட்சத பாறைகளும், காட்டு மரங்களும் வெள்ள நீருடன் அடித்து வரப்பட்டதில் பல கிலோ மீட்டருக்கு கிராமங்கள் இருந்த தடயமே இல்லாமல் போனது. குடியிருப்புகள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை அத்தனையும் தரைமட்டமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் மண்ணோடு மண்ணாகக் கலந்தனர். மாதக்கணக்கில் மீட்பு பணிகள் நடைபெற்றன. 

இதையும் படியுங்கள்:
SUPER SUBBU வெப் சீரிஸ் விமர்சனம் - பாக்யராஜ் ஸ்டைல் தெலுங்கு வெப் சீரிஸ்!
வயநாடு நிலச்சரிவு
logo
Kalki Online
kalkionline.com