

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு விரைந்தார். நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருக்கும் அதே வேளையில், இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரும் டெல்லிக்கு சென்றுள்ளனர். என்டிஏ கூட்டணியில் உள்ள மூன்று முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லிக்கு சென்றுள்ளதால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசியல் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கலந்தாலோசத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கும். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. யாருக்கு எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இன்னும் 4 நாட்களில் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.
அடுத்த வாரம் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக இருக்கிறது. தமிழக அரசியல் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கலந்தாலோசித்தேன். தவெக-வை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை. நாங்களும் கூட்டணி குறித்து பேசவில்லை; அவர்களும் கூட்டணி குறித்து பேசவில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என இபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லியில் இருக்கும் நிலையில், இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரும் டெல்லிக்கு பறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக 165, பாஜக 31, பாமக 17, அமமுக 9 மற்றும் தமாக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்னும் நான்கு நாட்களில் அனைத்து முடிந்துவிடும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பதால், இன்று டெல்லியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த கையோடு, அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி தனியாக டெல்லிக்கு சென்றார். அதற்குப் பின் நேற்று அவர் டெல்லிக்கு சென்றதால், கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது