

அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் இந்த வருட அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கு வருடத்தின் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூலை 3ஆம் தேதி தொடங்க உள்ளது. 57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கிலோமீட்டர் நீளமுள்ள நுன்வான்-பஹல்காம் வழிதடத்திலும், காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள செங்குத்தான குறுகிய 14 கிலோ மீட்டர் நீளமுள்ள பால்டால் வழித்தடத்திலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. இந்த அமர்நாத் யாத்திரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை கவர்னர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் பெருமளவில் திரண்டு 'பம் பம் போலே' என்று முழக்கமிட்டனர்.
இந்த யாத்திரை ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் 28 இல் நிறைவடையும். யாத்திரையை தொடங்குவதற்கு முன்பாக யாத்திரைக்கான ஆயத்த பணிகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு 137வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் மோப்ப நாய் பிரிவினருடன் இணைந்து சோதனைகளை நடத்தினர். ஜம்மு கோட்டத்திற்கு வரும் அனைத்து யாத்திகர்களுக்கும் தங்கும் இடம், உணவு மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் எந்தவொரு யாத்ரீகருக்கும் அசௌகரியம் ஏற்படாது என்று ஜம்மு கோட்ட ஆணையர் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.
2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு கோட்டிற்கு அப்பால் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கிய 'ஆபரேஷன் சிந்துர்' நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான காலத்துக்குப் பிறகு இந்த யாத்திரை நடைபெறுகிறது. அந்த தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளும், 1 உள்ளூர்வாசியும் கொல்லப்பட்டனர். எனவே யாத்திரைக்கு முன்னதாக கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பகவதி நகர் பகுதியில் இருந்து சுமார் 5,000 பக்தர்கள் இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களுடைய பயணத்தை ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பயணம் தொடங்குவதற்கு முன்பு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு, யாத்திரிகர்கள் உற்சாகமாக பக்தி கோஷங்களை எழுப்பியபடி பயணத்தைத் தொடங்கினார்கள்.
இவர்களது வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் அமர்நாத் யாத்திரை தொடங்கக்கூடிய பஹல்காம் மற்றும் பால்டால் பகுதிகளிலும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு முகமைகள் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்கள் சிரமமின்றி யாத்திரியை மேற்கொள்வதற்காக ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று முதல் அமர்நாத் யாத்திரை நிறைவடையும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.