

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது, எல்ஐசி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்திற்கு சுமார் ரூ.3,750 கோடி வரை நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அனில் அம்பானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் நிதி நிலை குறித்து தவறான தகவல்களை கூறி, எல்ஐசி நிறுவனத்தை சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய அனில் அம்பானி தூண்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எல்ஐசி நிறுவனத்திற்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கையின்படி, கீழ்க்கண்ட சில முறைகேடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
* வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற நிதியை தவறாக பயன்படுத்தியது.
* துணை மற்றும் போலி நிறுவனங்கள் வழியாக பணத்தைப் பரிமாற்றம் செய்தது.
* போலி ரசீதுகள் மூலம் கணக்குகளைக் காட்டியது.
அனில் அம்பானி மீது சிபிஐ பதிவு செய்யும் 4-வது வழக்கு இதுவாகும். இதற்கு முன்னதாக எஸ்பிஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.