இன்றைக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது ஃபேஷன் ஆகிவிட்டது. வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த லிவ்-இன் உறவுகள் காலப்போக்கில் இந்தியாவிலும் காலூன்றி பரவத்தொடங்கியுள்ளது. ஐடி நகரமான பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி இரண்டாம் கட்ட நகரங்களிலும் காதல் ஜோடிகள் லிவ்-இன் உறவில் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. திருமணத்திற்கு முன் தம்பதிகள் தாங்கள் ஒன்றாக வாழ்ந்து பார்க்கும் முறையாக இந்த லிவ்-இன் உறவு இருக்கிறது. அதிலும் ஐ.டி, சினிமா துறையில் வேலை செய்பவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்கின்றனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஜஸ்ட் லைக் தேட் என அவர்கள் பிரிந்து சென்று விடுகின்றனர்.
ஆனால், சமீபகாலமாக லிவ்-இன் உறவில் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டவே பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தான், ஒரு வழக்கில் லிவ்-இன் உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது.
லிவ்-இன் உறவுகள் இந்திய சமூகத்திற்கு கலாச்சாரத்திற்கு எதிராக இருந்தாலும், இந்த உறவில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நீதிபதி எஸ். ஸ்ரீமதி குறிப்பிட்டார். மேலும் தற்போதுள்ள நவீன வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த உறவை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு இதில் திருமணப் பாதுகாப்பு இல்லாதபோது மன உளைச்சலுக்கு ஆளாவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு, காதல் திருமணத்தின் கீழ் 'மனைவி' அந்தஸ்தை வழங்க வேண்டும். இதன்மூலம், லிவ்-இன் உறவில் சிக்கல் ஏற்பட்டாலும், அவர்களுக்கு 'மனைவி' என்ற வகையில் உரிமைகள் வழங்கப்படும் என நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த கருத்துகள், திருமண வாக்குறுதி வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்கும்போது வெளியாகியுள்ளது.
அதாவது மனுதாரர் திருமண வாக்குறுதி கொடுத்து காதலித்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட நிலையில், பெற்றோர்கள் மறுத்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள திருச்சிக்கு சென்று ஒன்றாகத் தங்கியுள்ளனர். ஆனால் காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்தபோது, காவல் நிலையத்தில் மனுதாரர் பெண்ணை மணப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால், குடும்பத்தினர் கலப்புத் திருமணம் என்பதால் எதிர்த்ததால் திருமணம் செய்ய மறுத்து வேலையோ வருமானமோ இல்லாததால் பெற்றோரைச் சார்ந்தே வாழ்வதாகவும், அப்பெண்ணை மணக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார்.
பாலியல் உறவுக்குப் பிறகு திருமணம் செய்ய முடியாது என மனுதாரர் கூறியதை மேற்கோள்காட்டிய நீதிபதி, மோசடியான பாலியல் உறவைக் குற்றமாக்கும் BNS சட்டத்தின் பிரிவு 69ன் கீழ் மனுதாரரை சேர்க்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
பாலியல் உறவு நடந்திருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணை மனைவியாக அங்கீகரிக்க வேண்டும் அல்லது திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த குற்றத்திற்காக மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிமன்றம் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.