

நாட்டில் போலி வாக்காளர்களை நீக்க, சிறப்பு தீவிர வாக்களார் திருத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல்கட்டமாக பீகாரில் வாக்காளர் திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று மாலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதன்படி 97.37 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை https://electoralsearch.eci.gov.in/, voters.eci.gov.in, மற்றும் https://www.elections.tn.gov.in/SIR_2026.aspx, என்ற இணையதள முகவரியில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. ஒரு மாதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள் கூடுதல் அவகாசத்துடன் கடந்த டிசம்பர் 14 தேதியுடன் முடிவடைந்தது. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளம் அல்லது erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளம் வாயிலாக அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள காரணங்கள் தவறானது மற்றும் ஆட்சேபனைக்குரியதாக இருந்தால் வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி வரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிக்கலாம்.
இதன்படி புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் படிவம் 6 மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரைவு பட்டியலின்படி தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பிஎல்ஓ அல்லது இஆர்ஓ சாவடி முகவர்கள் மற்றும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே சிறப்பு முகாம்களை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சென்னையில் மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது சென்னை வாக்காளர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைய விரும்பும் சென்னைவாசிகளுக்கு உதவும் விதமாக, இன்று (டிசம்பர் 20) மற்றும் நாளை (டிசம்பர் 21) ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை - 97,37,831
இறந்தவர்களின் எண்ணிக்கை - 26,32,672
இரட்டைப் பதிவு கொண்டவர்களின் எண்ணிக்கை - 3,39,278
முகவரி இல்லாதவர்களின் எண்ணிக்கை - 66,44,881
சென்னையில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 14,25,018.
தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களை அதிகமாக உள்ளனர்.
பெண்கள் - 2,77,06,332
ஆண்கள் - 2,66,63,233.