

ஈரான்-இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28-ம்தேதி தொடங்கிய போர் பதற்றம் காரணமாக, கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தம் உள்ளிட்ட சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் எண்ணெய் விநியோகத்தையும் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே, இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு இருப்பதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எதுவும் மூடப்படவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை உட்பட இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் சீரற்ற முறையில் இருப்பதால், வழக்கமாக வரும் சிலிண்டர்கள் வராமல் ஹோட்டல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹோட்டல், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
தமிழகத்தில் பல பகுதிகளில் பல உணவங்கள் மூடப்பட்டு விட்டன. சாலையோரமாக உள்ள பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. மாலை நேரங்களில் பஜ்ஜி, வடை போட்டு விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளும் செயல்படாமல் உள்ளன.
இப்படி பகுதி நேரமாக ஓட்டல்களை நடத்துவதற்கு தேவையான சிலிண்டர்கள் கிடைக்காத காரணத்தால் எத்தனை நாட்கள் இப்படியே காலத்தை தள்ளுவது என்று தெரியவில்லை என ஓட்டல் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இதன் விளைவாக, செலவுகளைச் சமாளிப்பதற்காகப் பல ஹோட்டல்கள் உணவு விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை உயர்த்தியும் மற்றும் உணவுப் பட்டியலில் உள்ள உணவு வகைகளைக் குறைக்கவும் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக, அன்றாட உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாடிக்கையாளர்களும் இதன் தாக்கத்தை உணர்கின்றனர்.
இந்நிலையில், சில இடங்களில் கடந்த சில தினங்களாக டீ 15 ரூபாயில் இருந்து 20 ஆகவும், காபி 20ல் இருந்து 25 ரூபாயாகவும் விலையேற்றம் செய்யப்பட்டது. பலமடங்கு உச்சத்திற்கு சென்ற டீ, காபி விலை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே எஞ்சியுள்ள சிலர் ஹோட்டல் உரிமையாளர்களும் ஹோட்டலை நடத்துவதற்காக வேறு வழியில்லாமல் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரை ரூ.7,000 முதல் ரூ.7,500 வரையிலான அதிக விலையில் கள்ளச் சந்தையில் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஆரம்பத்தில் ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்பனையான வணிக சிலிண்டர்கள் பின்னர் ரூ.5000க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல் தொழிலை மிகுந்த சிரமத்துக்கிடையே நடத்தி வருகிறோம். வணிக சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பலர் விற்பனை செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
வணிக சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வணிக சிலிண்டர்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையற்ற எல்பிஜி விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 7-ம்தேதி திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் ரூ.2,044க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.115 விலை உயர்ந்து தற்போது ரூ.2,044க்கு விற்பனை செய்யப்படுகிறது.