

குடிநீர் பாட்டில்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அதுகுறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு வட மாநிலங்களில் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளில் சேகரிக்கப்பட்டு, ஆய்வு நடத்தியபோது, அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதேபோல பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை போன்றவற்றிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பசுமை பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வனவிலங்குகள் மற்றும் வனபாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது.
அப்போது நீதிபதிகள் குடிநீர் பாட்டில்கள் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மைக்ரோ பிளாஸ்டிக் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை குடித்து விட்டு காலி குடிநீர் பாட்டில்களை வனப்பகுதிகளில் தூக்கி எறிப்படுவதால் வனவிலங்குகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தங்களது கருத்தினை தெரிவித்தனர்.
பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டதை தெரிவித்த நீதிபதிகள் இதுபோன்ற செயல்கள் எதிர்கால மனித சமூதாயத்திற்கு பெரிய தீங்காக அமையும் எனவும், எனவே தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறது.
அப்போது மத்திய சுகாதார துறை சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கெனவே வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் நுண்துகள் பாதிப்பு குறித்து லக்னோ, கொச்சி, பிலானி மூன்று இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் இந்த ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதால், இப்போது இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆய்வுகளை விரைந்து முடித்து அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுத்திய நீதிபதிகள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச்செய்ய வேண்டும் என குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.