

73% பதின்ம வயதினர் ஏதேனும் ஒரு வகையில் செயற்கை நுண்ணறிவு என்ற AI-யைப் பயன்படுத்துகிறார்கள். செயற்கை நுண்ணறிவு ஒரு பயனுள்ள கருவிதான், ஆனால் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை முடிக்கவோ, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவோ, தொடர்ச்சியான உரையாடல்களில் ஈடுபடவோ அதைச் சார்ந்திருந்தால், அதனால் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில், அதன் வரம்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் முதிர்ச்சியடையாமல் இருக்கலாம்.
சமீபத்தில், மெட்டா தொழில்நுட்ப நிறுவனம் சிறார்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உடன் செய்யும் உரையாடல்களை பெற்றோர்கள் கண்காணிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் பேஸ்புக் தளங்களில் டீனேஜர்கள் மெட்டா ஏஐயுடன் மேற்கொள்ளும் உரையாடல்களின் முக்கிய தலைப்புகளைப் பெற்றோர்கள் பார்க்கும் வகையில் இன்சைட்ஸ்' (Insights) என்ற புதிய பகுதியைக் கொண்டுவருகிறது.
இதில், கடந்த ஏழு நாட்களில் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் மெட்டா செயற்கை நுண்ணறிவிடம் கேட்ட தலைப்புகளைப் பெற்றோர்கள் பார்க்கலாம்.
பாதுகாப்பான மற்றும் வயதுக்கு ஏற்ற இணைய அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய கண்காணிப்பு கருவி கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும், இதில் சில வரம்புகள் உள்ளன; அதாவது இதில் பெற்றோருக்கு அந்த உரையாடல் குறித்து முழு விவரம் தெரியவராது, பதிலாக அந்த உரையாடல்கள் எதைப்பற்றியோ அந்த தலைப்புகள் வரும் பிரிவுகளை மட்டுமே காட்டும்.
உதாரணமாக, முழுமையான உரையாடல்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக, இந்தக் கருவி பள்ளி, பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை, மற்றும் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு போன்ற பொதுவான பிரிவுகளை முன்னிலைப்படுத்துகிறது. ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உடற்பயிற்சி, ஃபேஷன் போன்ற குறிப்பிட்ட உட்பிரிவுகளையும் பார்க்க முடியும். இது தனியுரிமையைப் பேணிக்கொண்டே, பெற்றோர்களுக்குத் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளின் உரையாடல்கள் குறித்த பரந்த புரிதலை வழங்குகிறது.
தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, உலகளாவிய வெளியீட்டின் ஒரு பகுதியாக அடுத்த சில வாரங்களில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கூறிய நாடுகளில், ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டாவின் அனைத்து தளங்களிலும் கிடைக்கிறது.
மெட்டாவின் இந்த புதிய முயற்சி, டீனேஜர்கள் ஏஐயை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும், தேவையற்ற அல்லது வயதுக்கு முரணான உரையாடல்களைத் தடுக்கவும் பெற்றோர்களுக்கு உதவும்.
இருப்பினும், AI தவறான தகவல்களைத் தரலாம் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்கலாம் என்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் AI-யுடன் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்கொலை அல்லது சுய-தீங்கு முயற்சி தொடர்பான உரையாடல்களில் டீன் ஏஜ் பிள்ளைகள் ஈடுபட முயன்றால், பெற்றோர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மெட்டா நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த அம்சங்கள், இணையத்தில் பதின்வயதினரின் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், மேலும் செயலூக்கமான மேற்பார்வையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த மேம்படுத்தல்களுடன், மனநலம், இளைஞர் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு நல்வாழ்வு நிபுணர் குழுவை மெட்டா அறிவித்துள்ளது. பதின்வயதினருக்கான பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள செயற்கை நுண்ணறிவு அனுபவங்களை வடிவமைக்க உதவும் வகையில், இந்தக் குழு தொடர்ச்சியான கருத்துக்களை வழங்கும்.