

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னராக புகழ்பெற்ற இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் படங்களில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி திரைத் துறையில் நுழைந்த பாக்யராஜ், புதிய வார்ப்புகள் படத்தில் முன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் 22 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள் மற்றும் இன்று போய் நாளை வா போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
பாக்யராஜின் கலைத் திறமையை வியந்து பாராட்டிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர்., என்னுடைய அடுத்த கலை வாரிசு பாக்யராஜ் தான் என ஒருமுறை தெரிவித்திருந்தார். பாக்யராஜுக்கு திரைத்துறையில் எவ்வளவு ஆர்வம் இருந்ததோ, அதே அளவிற்கான ஆர்வம் அரசியல் மீதும் இருந்தது.
தொடக்கம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த பாக்யராஜ், அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் வெளியான ருத்ரா என்ற திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப் படங்கள் திரையில் தெரியும் படி காட்சியை அமைத்திருந்தார்.
இருப்பினும் அவரால் அதிமுக-வில் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி ‘எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அரசியலில் புது அவதாரம் எடுத்தார் பாக்யராஜ்.
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. இந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வெறும் 87 வாக்குகளை மட்டுமே பெற்றதால், அரசியலில் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
படுதோல்வியை சந்தித்த எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து நடத்த முடியாமல், கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் அதிமுக-விலேயே தன்னை இணைத்துக் கொண்டார் பாக்யராஜ். ஆனால் இம்முறையும் பாக்யராஜால் அதிமுக-வில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக 2006 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பாக்யராஜ். திமுக-வில் பாக்யராஜ் இருந்த போது, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விமர்சித்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தவே, திமுக-வில் இருந்தும் விலகி, அரசியல் பார்வையாளராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
அரசியல் களம் சரியாக அமையாததால், மீண்டும் திரைத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார் பாக்யராஜ்
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த பாக்யராஜூக்கு, அரசியல் களம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அவர் அரசியல் கட்சியைத் தொடங்கிய போது எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற முக்கிய ஆளுமைகள் தமிழ்நாட்டில் இருந்தனர். இவர்களைத் தாண்டி அவரால் தான் உருவாக்கிய கட்சியை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது.
அதோடு பாக்யராஜின் அரசியல் கட்சி தமிழ்நாட்டில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. ஒருவேளை அவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
பாக்யராஜின் குருவான இயக்குநர் பாரதிராஜா இறந்த சில நாட்களிலேயே, அவருடைய சீடரும் உயிரிழந்திருப்பது தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான்.