

தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அளவிலான ஒலிம்பிக் வீரர்களை உருவாக்குவதே தங்களின் முக்கிய நோக்கம் என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்ற நிலையை மாற்ற, தமிழக அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இணைந்து பல்வேறு அதிரடி திட்டங்களை வகுத்து வருகின்றன.
புதிய ஒலிம்பிக் அகாடமிகள்:
தமிழகம் முழுவதும் சர்வதேச தரத்திலான 10 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக, மதுரையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச விளையாட்டு நகரம் (Global Sports City):
சென்னை செம்மஞ்சேரியில் முந்தைய ஆட்சியில் திட்டமிடப்பட்ட விளையாட்டு நகரத் திட்டம் கைவிடப்படவில்லை; மாறாக அது ஒலிம்பிக் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்யப்படுகிறது என்றவர், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 125 ஏக்கர் நிலம் தமிழ்நாடு விளையாட்டு அபிவிருத்தி ஆணையத்திடமே (SDAT) தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். இந்த விளையாட்டு நகரத்தில் 46 வகையான விளையாட்டுகளுக்கு சர்வதேச அளவிலான அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.
38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள்:
தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கென பிரத்தியேக நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.
சர்வதேச தரத்திற்கு விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. அத்துடன் புதிய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, மாவட்டங்கள் முழுவதும் சிறுவர் மற்றும் சிறுமியருக்காக 38 விளையாட்டு விடுதிகளை நிறுவவும், சர்வதேச தரத்திலான வசதிகளுடன் கூடிய 10 ஒலிம்பிக் அகாடமிகளை அமைக்கவும் அரசு திட்டங்களை அறிவித்துள்ளது என்று கூறினார்.
இந்த விளையாட்டு விடுதிகளில் சுமார் 36,000 பேர் தங்கிப் பயில உள்ளார்கள். தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, விரைவில் தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதார் அர்ஜுனா கூறினார். மாநிலம் முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அர்ஜுனா, மேம்படுத்தப்பட்ட திட்டம் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறினார்.
விளையாட்டு வீரர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் அவர்களுக்கென்று பிரத்தியேக கல்விக் கொள்கை மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 5.15 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரண வங்கி தொடங்கப்பட உள்ளது.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களின் விமானப் பயணக் கட்டணத்தை அரசே ஏற்கும். இப்படி விளையாட்டுத் துறையில் தமிழகத்தை உலக அரங்கில் முன்னிறுத்த, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் பல்வேறு விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.