

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் புதுப்புது அதிரடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆன தவெக கட்சி கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளை மண்ணை கவ்வ வைத்தது வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் புதுப்புது மாற்றங்களை சந்தித்து வருகிறது.
தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்குள் அரங்கேறி வரும் உட்கட்சி மோதல்கள் இன்னும் முழுமையாக அடங்காத சூழலில், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வேகவேகமாக அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
இந்நிலையில் தான் மற்றொரு அதிரடி திருப்பமாக, கலைஞர் கருணாநிதியின் மகனும், தமிழக அரசியல் களத்தில் தென் மாவட்டங்களின் முடிசூடா மன்னராக வலம் வந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு அரசியல் பிரவேசம் செய்யத் தயாராகி வருகிறார். அதுவும் திமுகவின் பரம எதிரியான ஆளுங்கட்சி தவெகவில் தான் இந்த அதிரடி மாற்றம் நிகழவுள்ளது. அழகிரியின் மகள் கயல்விழி, தற்போது ஆளுங்கட்சியான தவெகவில் இணைய தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரையைத் தன்வசப்படுத்த, முக அழகிரியின் மகள் கயல்விழியை தவெகவில் இணைத்து மதுரை மேயர் வேட்பாளராக்க சுடச்சுட பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகாலமாக திமுகவுடன் பயணித்த கூட்டணி கட்சிகளும் ஒவ்வொன்றாக தற்போது தவெக பக்கம் சாய்ந்து வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில் மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயமாக முக அழகிரியின் மகள் கயல்விழி தவெகவில் இணைந்து மதுரை மேயராக முயற்சிப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் திமுகவினர் மத்தியில் இடியை இறக்கியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே ‘திமுக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை குறைத்து மதிப்பிடுகிறது. விஜய் நிச்சயம் வாக்குகளை பிரிக்கப் போகிறார். திமுகவின் வெற்றி பல இடங்களில் பறிபோகப் போகிறது. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத ஒரு நிலை கூட உருவாகலாம்’ என்று சரியாக கணித்து சொன்னவர் தான் முக அழகிரியன் மகள் கயல்விழி.
இந்த சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத சம்பவமாக தேர்தலில் திராவிட கட்சிகளை வீழ்த்தி தவெக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதனைதொடர்ந்து நடைபெற்ற முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நேரடியாக சென்று கயல்விழி பங்கேற்றது திமுகவினர் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘நான் இங்கு முதல்வர் விஜய்யின் பதவியேற்பை பார்க்க வரல, ஒரு தங்கையா அண்ணனோட பதவி ஏற்பை பார்க்கிறதுக்காக வந்தேன்’ என்றார்.
ஆனால் அதன் பிறகும் நேரடியாக வந்து முதலமைச்சர் விஜய்யை தலைமை செயலகத்திற்கு சந்தித்தார் கயல்விழி. இது அனைத்துமே அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது.
கூடிய விரைவில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று கட்சியை கடை கோடி வரை எடுத்து செல்ல தவெக மும்மரமாக திட்டங்களை தீட்டி வருகிறது.
மறுபுறம் மதுரை என்றாலே முக அழகிரியின் கோட்டை என்ற பிம்பம் நீண்ட காலமாக அரசியல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக சார்பில் தனக்கு 'மதுரை மாநகராட்சி மேயர்' பொறுப்பு என்ற உறுதியான வாக்குறுதியை வழங்க வேண்டும் என தவெக உயர்மட்டக் குழுவிடம் கயல்விழி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் தவெக தலைமை மதுரை மேயர் பதவியை கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது. ஏனெனில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் ஆதரவாளரான மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் மருது பாண்டியன் மேயர் பதவியை கைப்பற்றத் தீவிரமாகக் காய் நகர்த்தி
வருவதால் தவெக தலைமை அழகிரியின் மகள் கயல்விழிக்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி, கட்சிக்குள்ளேயே நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் தவெக உறுதியாக இருப்பதால், கயல்விழிக்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முன்வரவில்லை எனத் தெரிகிறது.
மதுரை மாநகராட்சியைத் தன் வசம் கொண்டு வர தவெகவின் அமைச்சர்களும், நிர்வாகிகளும் இப்போதே தங்களுக்குள் கோதாவில் இறங்கியுள்ள நிலையில், ‘மதுரை மேயர் நாற்காலி’ முன்னாள் மத்திய அமைச்சரின் மகளுக்கா? அல்லது அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் ஆதரவாளர் மருதுபாண்டியனுக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் விஜய் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்க்கவும் உள்ளது. அதாவது, தன் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவருக்கு கொடுக்க போகிறாரா அல்லது மதுரை மைந்தனின் மகளுக்கு தாரை வார்க்கப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கயல்விழி தவெகவில் இணையும் பட்சத்தில் அழகிரியின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைய அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம், அழகிரி, ஸ்டாலின் இடையே கட்சி மட்டும் இருந்த பிரச்சனை அதன்பிறகு குடும்பத்திலும் விரிசலை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின் அதிமுக, திமுகவைச் சேர்ந்த பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது கயல்விழியும் தவெகவில் இணையும் பட்சத்தில், திமுக குடும்பத்திற்குள்ளேயே தவெக ஊடுருவிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.