சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

Monthly Pass
Chennai One App
Updated on

சென்னையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை இணைக்கும் வகையில் ‘சென்னை ஒன்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்த சிறிது நாட்களிலேயே சென்னை ஒன் செயலியை பயணிகள் பலரும் பதிவிறக்கம் செய்து, டிக்கெட்டுகளை புக் செய்தனர். நாளுக்கு நாள் சென்னை ஒன் செயலியின் பயன்பாடு, பயணிகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் மாதாந்திர பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டு வர மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வந்தது.

கடந்த மாதம் வெகுவிரைவில் சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் சென்னை ஒன் செயலில் பேருந்து பயணத்திற்கான மாதாந்திர பயண அட்டை அமலுக்கு வரும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மாதாந்திர பயண அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்த சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் பேருந்து பயணத்திற்கான மாதாந்திர பயண அட்டை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக பயணிகள், நடத்துநர்கள், ஒட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் வெளியிட்டுள்ளது.

இதன்படி டைமண்ட் மற்றும் கோல்ட் வகையான 2 மாதாந்திர பயண அட்டைகள் அறிமுகமாக உள்ளன. டைமண்ட் வகையான மாதாந்திர பயண அட்டைக்கு ரூ.2,000 மற்றும் கோல்ட் வகையான மாதாந்திர பயண அட்டைக்கு ரூ.1,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயணிகள் அனைவரும் தங்களின் மாதாந்திர பயண அட்டைகளை பேருந்துகளில் மிகவும் எளிமையாகப் பயன்படுத்த முடியும். பயண அட்டையை வாங்கிய நாள் முதல் அடுத்த 30 நாட்களுக்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
சென்னை மெட்ரோவில் இனி இதற்கு அனுமதி இல்லை: வெளியானது முக்கிய அறிவிப்பு..!
Monthly Pass

வழிகாட்டு நெறிமுறைகள்:

1. பயணிகள் பேருந்தில் ஏறியதும் மொபைல்போனில் இருக்கும் ‘சென்னை ஒன்’ செயலியில் டிஜிட்டல் மாதாந்திர பயண அட்டையை நடத்துநரிடம் காண்பித்து ஸ்கேன் செய்ய வேண்டும். இதனை நடத்துநரும் சரிபார்ப்பார்.

2. டைமண்ட் பாஸ் வைத்திருந்தால், ஏசி பேருந்து உள்பட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணிக்கலாம். கோல்ட் பாஸ் வைத்திருந்தால் ஏசி அல்லாத பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும்.

3. கியூஆர் கோட் அல்லது ஓடிபி மூலமாக பயணிகள் பேருந்தில் ஏறுவதும், இறங்குவதும் பதிவு செய்யப்படும்.

4. Animated Security Markers (ASM) மூலம் மாதாந்திர பயண அட்டைகள் அனைத்தும் உண்மையானது தானா என உறுதி செய்யப்படும்.

5. சென்னை ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையை வேகப்படுத்துவதன் காரணமாக பரிசோதனை முறைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
'சென்னை ஒன்' செயலியில் ஏசி மின்சார இரயில் டிக்கெட்டை எடுக்க முடியுமா..? தெற்கு இரயில்வே விளக்கம்.!
Monthly Pass
logo
Kalki Online
kalkionline.com