

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்டு, விண்வெளியில் கட்டுப்பாடின்றிச் சுழன்றுகொண்டிருக்கும் பால்கன்-9 ( Falcon 9 Rocket) ராக்கெட்டின் மேல்பகுதி, வரும் ஆகஸ்ட் 5-ம்தேதி (நாளை மறுநாள்) நிலவின் மீது மோதவுள்ளது. இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன்-9 (Falcon 9) ரக ராக்கெட், நாசாவின் (NASA) கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஆண்டு (2025) ஜனவரி 15-ம்தேதி 2 லேண்டர்களுடன் நிலவுக்கு புறப்பட்டு சென்றது. 2 லேண்டர்களும் நிலவை அடைந்து விட்டன.
Firefly Aerospace-க்கு சொந்தமான 'ப்ளூ கோஸ்ட்' (Blue Ghost) மற்றும் ispace-க்கு சொந்தமான 'ரெசிலியன்ஸ்' (Resilience) ஆகிய இரண்டு லேண்டர்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. அதில், ஒரு லேண்டர் நிலவின் மீது மோதி விட்டது. மற்றொரு லேண்டரான 'ப்ளூ கோஸ்ட்' நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
2 வாரங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்ட அந்த லேண்டர், நிலவில் சூரியன் மறையும் அரிய புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியது. எனினும் நிலவில் சூரியன் மறைந்ததும் தன்னுடைய ஆற்றலை இழந்து செயலிழந்தது.
இந்த நிலையில் லேண்டர்களை இறக்கிவிட்ட அந்த ராக்கெட்டின் மேல் பகுதி (Upper Stage), தன்னுடைய வேலையை முடித்து விட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால் அது பத்திரமாக பூமிக்குத் திரும்பாமல், விண்வெளியின் உயர்மட்டச் சுற்றுவட்டப்பாதையில் சிக்கிக்கொண்டது.
பூமிக்கு திரும்பாததால் ராக்கெட் என்ன ஆனது? என விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்று 1,053 முறை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதில் பலமுறை பூமி மற்றும் நிலவு ஆகியவற்றின் சுற்றுவட்டப்பாதைகளை அது கடந்து சென்றது தெரியவந்தது. ஆனால் அதன் மீதும் மோதும் வகையில் நெருங்கி செல்லவில்லை.
இந்த நிலையில் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்ட அந்த ராக்கெட், எரிபொருள் தீர்ந்து கட்டுப்பாட்டை இழந்து, தற்போது நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கி, நிலவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் நிலவின் மேல்பரப்பில் இந்த மோதல் (நிலவில் மோதல்) விரைவில் நடக்கப்போகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி சுற்றுவட்டப்பாதை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். அதன் பயணம் மற்றும் வருங்காலத்தில் அதற்கு என்ன நடக்கும்? என்பது பற்றி கணித்துள்ளனர்.
40 அடி நீளமும், 13 அடி அகலமும், சுமார் 4,000 கிலோ எடையும் கொண்ட இந்த பால்கன் ராக்கெட் பாகமானது, நிலவின் 'ஐன்ஸ்டீன் பள்ளம்' (Einstein Crater) பகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 1:14 மணிக்கு மோதும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, அது நிலவின் மீது மணிக்கு 8,750 கி.மீ (ஒலியின் வேகத்தைப் போல 7 மடங்கு வேகம்) வேகத்தில் மோதவிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
எனினும் இச்சம்பவம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் விண்வெளியில் இதுபோன்ற குப்பைகள் சேராமல் அதனை கவனத்துடன் அகற்றுவது பற்றிய தேவையை உணர்த்தியுள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதனால் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும்:
மணிக்கு 8,750 கி.மீ வேகத்தில் மோதும்போது, நிலவின் மேற்பரப்பில் 65 முதல் 100 அடி வரை அகலமுள்ள மிகப்பெரிய பள்ளம் (Crater) உருவாகும்.
மோதலின் தீவிரத்தால் ஏற்படும் தூசுப் படலம் பல கிலோமீட்டர்கள் உயரத்திற்கு நிலவின் வளிமண்டலமற்ற வெளியில் பரவும்.
சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் (Telescopes) மூலம் இந்த மோதல் நிகழ்வை பூமியிலிருந்து நேரடியாகப் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் இதுபோன்று சேரும் குப்பைகளை (Space Debris) எதிர்காலத்தில் எவ்வாறு கவனத்துடன் அகற்றுவது என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, இதுவரை 26 நாட்களில் பூமியை ஒரு முறை சுற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.