

பெரும்பாலான நடுத்தர மக்கள் இருசக்கர வாகனங்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக மலிவான விலையில் வாங்கப்படும் இருசக்கர வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கும். ஆனால் இதன் வேகம் குறைவாக இருக்கும்.
வேகம் அதிகரிக்க அதிகரிக்க மைலேஜ் குறையும் என்பது இயல்பானது தான். ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பெட்ரோலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.
இந்த பெட்ரோலை பயன்படுத்தினால் ஆண்டுக்கு 100 கிலோ மீட்டர் வரை கூடுதல் மைலேஜ் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைலேஜ் குறைவாக இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.
மொபைல் சேவை முதல் பெட்ரோல் வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஏற்கனவே இந்தியாவில் ஆங்காங்கே பெட்ரோல் நிலையங்களை அமைத்துள்ள ஜியோ நிறுவனம், தற்போது பெட்ரோலில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது.
இதன்படி ஜியோ பெட்ரோல் நிலையங்களில் போடப்படும் பெட்ரோலை பயன்படுத்தினால், இருசக்கர வாகனங்களின் ஆயுள் நீடிப்பதோடு ஆண்டுக்கு 100 கிலோ மீட்டர் மைலேஜ் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் புதிய வகை பெட்ரோல், அதிநவீன ஆக்டிவ் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மூலம் இன்ஜினில் அழுக்கு சேர்வதை இந்த பெட்ரோல் தடுப்பது மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள படிமங்கள் மற்றும் அழுக்குகளையும் நீக்கிடும் திறன் பெற்றது. இதன் மூலம் பெட்ரோல் டேங்க் சுத்தமாக இருப்பதால், இதன் ஆயுளும் அதிகரிக்கும்.
இதனுடைய மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண விலையிலேயே இந்த பெட்ரோல் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் என்பது தான். இந்தியாவில் உள்ள அனைத்து JIO-BP நிலையங்களிலும், புதிய வகை ஆக்டிவ் பெட்ரோல் கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போது, பொதுமக்கள் அதிக சிரமத்தை சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில் மைலேஜை அதிகரிக்க கூடிய பெட்ரோலை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருப்பது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நம்முடைய அன்றாட செலவுகளில் பெட்ரோலுக்கான செலவு மிகவும் முக்கியமானது. தற்போது மின்சார வாகனங்களின் வருகை ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பெட்ரோல் வாகனங்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழலை காக்கவும், கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கவும் மத்திய அரசு E-20 பெட்ரோலை களத்தில் இறக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக அறிமுகத்திற்கு வந்திருக்கும் ஜியோவின் புதிய வகை பெட்ரோல், வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.