2025 செப்டம்பர் 1, திங்கட்கிழமை அன்று, ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 622 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தலிபான்களின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தலைநகர் காபூலில் உள்ள சுகாதார அதிகாரிகள், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (German Research Centre for Geosciences) அளித்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு (இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 1.17 மணி) பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள குனார் (Kunar) மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் மையம் காபூலில் இருந்து சுமார் 119 கி.மீ (74 மைல்) தொலைவில் உள்ள ஜலாலாபாத் (Jalalabad), நங்கர்ஹார் (Nangarhar) மாகாணத்தில், 14 கி.மீ (8.7 மைல்) ஆழத்தில் இருந்தது. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, அதே மாகாணத்தில் 4.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
அதிகாரிகள் கூற்றின்படி, நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் களிமண் மற்றும் கற்களால் கட்டப்பட்ட பல வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், குனார் மாகாணத்தில் உள்ள பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட மலைப் பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் மீட்புப் படையினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.
ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வெளியே கொண்டு செல்லும் காட்சிகளும், குடியிருப்பாளர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்களுக்கு கொண்டு செல்ல உதவுவதும் புகைப்படங்களில் காணப்பட்டன.
உள்ளூர் அதிகாரி ஒருவர், நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கம் எங்கள் கிழக்கு மாகாணங்களில் சிலவற்றில் உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மற்றும் அருகிலுள்ள மாகாணங்களில் இருந்து ஆதரவு குழுக்களும் வந்து கொண்டிருக்கின்றன." என்றார்.
முன்னதாக, ஒரு கிராமத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
"பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம், ஆனால் அப்பகுதியை அணுகுவது கடினம் என்பதால், எங்கள் குழுக்கள் இன்னும் களத்தில் உள்ளனர்" என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷராஃபத் ஜமான் (Sharafat Zaman) கூறினார்.
"இதுவரை, எந்த வெளிநாட்டு அரசாங்கமும் மீட்பு அல்லது நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை" என்று வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இந்து குஷ் மலைத்தொடரில் இந்த நாடு அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து வலுவான நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
அப்போது, தலிபான் அரசாங்கம் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறியது, ஆனால் ஐக்கிய நாடுகள் சபை (United Nations) இறப்பு எண்ணிக்கை சுமார் 1,500 ஆக இருக்கலாம் என்று தெரிவித்தது.
2023 நிலநடுக்கம், அண்மைக் காலத்தில் ஆப்கானிஸ்தானை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாகக் கருதப்படுகிறது.