

டிரைவிங் லைசென்ஸ் என்பது ஒரு நபர் சாலைகளில் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாகும். இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மண்டல போக்குவரத்து அலுவலகத்தால் (RTO) வழங்கப்படுகிறது. அதாவது, டிரைவிங் லைசென்ஸ் ஒரு குறிப்பிட்ட நபர், மோட்டார் சைக்கிள், கார், லாரி அல்லது பேருந்து போன்ற மோட்டார் வாகனங்களை பொது சாலைகளில் ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக தகுதி பெற்றவர் என்பதை குறிக்கும் ஆவணமாகும். இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகும்.
பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற மற்ற அடையாள அட்டைகளை போலவே ஓட்டுநர் உரிமமும் மதிப்புடையதாகும். விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களிலும், பல்வேறு அதிகாரப்பூர்வ வேலைகளின் போதும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை தனிப்பட்ட அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.
அதேபோல் ஓட்டுநர் உரிமம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் புதிய டிரைவிங் லைசென்ஸ் பெற இனிமேல் RTO அலுவலகம் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் உள்ள சிரமத்தை குறைப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள் மற்றும் ஆன்லைன் வசதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்த பிறகு அங்கு நடத்தப்படும் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் அவர்களே உங்களுக்குச் சான்றிதழ் வழங்கி விடுவார்கள். அந்த சான்றிதழை வைத்து நீங்கள் ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.
அதேபோல் மத்திய அரசின் சாரதி பரிவஹன் போர்ட்டலிக்கு சென்று ஆன்லைன் மூலமாகவும் டிரைவிங் லைசென்ஸை எளிய முறையில் பெற முடியும்.
சாரதி பரிவஹன் (Sarathi Parivahan) என்பது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளமாகும். இது ஓட்டுநர் உரிமம் (DL), கற்றல் உரிமம் (LL), புதுப்பித்தல், நகல் உரிமம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற அனைத்து உரிமம் சார்ந்த சேவைகளையும் வீட்டில் இருந்தபடியே பெற உதவுகிறது.
‘சாரதி பரிவஹன்’ என்ற வெப்சைட்டுக்கு சென்று, "Drivers Licence Related Services" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவு செய்து ஆன்லைனிலேயே ஒட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அதனுடன் இணைக்க வேண்டிய ஆதார் அட்டை, வயதுச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பித்த பிறகு உங்கள் ஓட்டுநர் உரிமம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் இணையதளம் மூலமாகவே நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
அதேபோல் உங்களுடைய ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் அதுதொடர்பான புகார் அளித்து விட்டு ரசீதை பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து ‘சாரதி பரிவஹன்’ இணையதளத்திற்குச் சென்று டூப்ளிகேட் லைசன்ஸ் (Duplicate License) பிரிவிற்கு சென்று உங்களுடைய பழைய லைசென்ஸ் எண் மற்றும் விவரங்களைக பதிவிட்டு, அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்திய பின்னர் உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, சில நாட்களிலேயே புதிய ஸ்மார்ட் கார்டு உரிமம் தபால் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இனிமேல் பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் வசதி மூலமாகவே மிகக் குறைந்த செலவில் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும்.