

நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனிப் பாறைகள் உருகியதன் காரணமாக வரலாறு காணாத பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பனிப் பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் ஒரு முக்கிய காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மனித சிறுநீரும் ஒரு காரணம்:
மலையேற்ற வீரர்களும், வழிகாட்டும் நபர்களும் எவரெஸ்ட் அடிவார முகாம்களில் தான் தங்குகின்றனர். இவர்கள் தினந்தோறும் சுமார் 6,000 லிட்டர் சிறுநீரை பனியில் கழிக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு சீசனிலும் 154 டன் பனிப் பாறைகள் உருகுவதாக நேபாளம் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகுவதற்கு புவி வெப்பமயமாதல் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், மனித சிறுநீரும் ஒரு காரணம் என்பது தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா எச்சரிக்கை:
பூமியின் வெப்பம் இன்னும் சில ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை உச்சபட்ச நிலையை எட்டும். கடந்த 50 ஆண்டுகளில் காடுகள் அழிப்பு மற்றும் தொழில் வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் புவியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சூப்பர் எல்-நினோவின் தாக்கம் அதிகரிக்கும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஐநாவும் எச்சரிக்கை எடுத்திருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கடுமையான வறட்சியும், சில நாடுகளில் வரலாறு காணாத வெள்ளமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலின் காரணமாக பனிப்பாறைகள் உருகுவது மேலும் தொடர்ந்தால், நேபாள் பெருவெள்ளம் போல் இந்த உலகம் மேலும் பல வெள்ளங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக தற்போது புவியின் வெப்பநிலையை உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என ஐநா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகிளின் பங்களிப்பும், பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம்.
பருவகால மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் தத்தளிக்கிறது. இதிலிருந்து மீண்டு வர வேண்டுமாயின் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தி, இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
விஞ்ஞானிகளின் புது யோசனை:
புவி வெப்பமயமாதலின் மூலமாக பனிப் பாறைகள் உருகுவதைத் தடுக்க சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு புது யோசனையை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி செம்மறி ஆட்டின் தோலை மிகப்பெரிய போர்வையாக உருவாக்கி, அதனை பனிப் பாறைகள் மீது போர்த்தி விட்டால், பனிப் பாறைகள் உருகுவதை ஓரளவு தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதற்காக தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளின் மீதுள்ள பனிப் பாறைகள் மீது, செம்மறியாட்டு தோலில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான போர்வையை போர்த்தும் பணியை தொடங்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.
விஞ்ஞானிகளின் இந்த முயற்சி எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் பனிப் பாறைகள் உருகுவதைத் தடுக்கும் விஞ்ஞானிகளின் முயற்சி வரவேற்கத்தக்கது