

இந்தியாவில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலத்திற்கு பிரதமராக பொறுப்பு வகிப்பவர் என்ற பெருமையையும், புதிய சாதனையையும் படைத்துள்ளார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இன்றுடன் (ஜூன் 10) அவர் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவருக்கு முன் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் நீண்ட காலம் பிரதமராக பொறுப்பேற்று இருந்தாலும் மோடி அவர்களைப் போல் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்ததில்லை.
2014ம் ஆண்டு மே 26ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றவர், 2019ல் மக்கள் ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2024ல் மூன்றாவது முறையாகவும் பிரதமராக பொறுப்பேற்றவர் மோடி அவர்கள். தொடர்ச்சியாக 4,399 நாட்களுக்கு மேல் பிரதமராகப் பணியாற்றி நேருவின் சாதனையை முறியடித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 இல் அவர் இயற்கை எய்தும் வரை மொத்தமாக 4,398 நாட்கள் பதவியில் இருந்தார். இந்திரா காந்தி அவர்கள் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி வரை 4,077 நாட்கள் பிரதமராக இருந்தார்.ஆனால் தொடர்ச்சியான நாட்கள் அடிப்படையில் மோடி அவர்கள் இவரை விட புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த பெருமையை அடைந்த ஜவஹர்லால் நேருவை தற்போது பிரதமர் மோடி அவர்கள் அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தில் உள்ளார். அத்துடன் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பிறந்து பிரதமர் பதவி வகித்த முதல் தலைவராகவும் சாதனை படைத்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதவிக்காலம் வளர்ச்சி, பொதுநலனால் நிறைந்திருந்தது என்றும் நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோடி இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் பாஜக தலைவர் நிதின் நபின் பாராட்டியுள்ளார்.
உலகத் தலைவர்கள் பலரும் திரு. மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இலங்கை பிரதமர் அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்த சாதனை உங்கள் பதவிக்காலத்திற்கு மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்கள் தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கும் ஒரு சான்றாகும்" என்று பாராட்டியுள்ளார்.
நீண்ட கால பிரதமர் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரதமர் மோடிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முன்மாதிரி, தலைமைத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும், இன்று 20 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கைக்கு உயர்த்தியிருப்பது ஒரு அற்புதமான சாதனை என்றும் பாப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மாரபே தெரிவித்துள்ளார்.