

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 90-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவை நெடுஞ்சாலை பராமரிப்புக்காக பயன்பாட்டு கட்டணத்தை (Toll Fee) வசூலிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் நம்முடைய வாகனத்தில் இருக்கும் ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் தானாகவே வசூல் செய்யப்படும். இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கக்கூடிய நேரம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு, வாகன ஓட்டிகளை மனதில் வைத்தும், பகுதியளவு செயல்படும் தேசிய விரைவு சாலைகளில் சுங்க கட்டண வசூல் விதிமுறைகளில், பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த மாற்றம் வரும் பிப்ரவரி 15ம்தேதி (ஞாயிற்று கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டணம், 2008ன் விதிகளில் தற்போது மத்திய அரசு திருத்தியிருக்கிறது.
இந்த புதிய விதிமுறைகளின் கீழ், தேசிய விரைவு சாலையில், தொடக்கத்தில் இருந்து, இறுதி வரை திறக்கப்படாமல் இருந்தால், சுங்கக்கட்டணம் செயல்படும் பகுதிக்கு மட்டும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு விரைவு சாலை அதாவது எக்ஸ்பிரஸ்வேக்களில் பயணம் செய்யும் போது அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கே வரவில்லை, பாதி கட்டுமான பணி முடிந்திருக்கிறது, பாதி கட்டுமானம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் கட்டுமான பணி முடிந்த ஒரு பகுதி அளவு சாலையில் தான் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் அந்த முழு சாலைக்குமான சுங்க கட்டணத்தை நீங்கள் செலுத்த தேவையில்லை. குறைந்தபட்ச சுங்க கட்டணத்தை(தேசிய நெடுஞ்சாலைக்கு வசூல் செய்யப்படும் கட்டணம்) மட்டுமே இனி வசூல் செய்யப்படும்.
இதுவரை, பல இடங்களில் பகுதியளவு முடிக்கப்பட்ட விரைவுச் சாலைகளில் கூட முழு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய விதிமுறை பயணிகளுக்கு பெரிய நிம்மதியை தந்துள்ளது.
இந்த கட்டண குறைப்பு மூலம், விரைவுச் சாலையின் செயல்பாட்டு பகுதிகளை பயன்படுத்த அதிகமான வாகன ஓட்டிகள் முன் வருவார்கள் என்று அரசு கூறுகிறது.
இதன் மூலம் பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த விரைவு சாலைகளை நோக்கி திரும்பும் என்றும் தளவாட செலவுகளையும் இது குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான தேசிய நெடுஞ்சாலைகளை காட்டிலும் விரைவு சாலைகளில் 25 சதவீதம் அதிகமாக தான் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த புதிய விதிமுறையினால், சீரான போக்குவரத்தானது, பயணிகளின் நேரத்தையும், எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்கும். இதன் மூலமாக, போக்குவரத்து நெரிசலையும், மாசு கட்டுப்பாட்டையும் குறைப்பது மத்திய அரசின் நோக்கமாகும்.
பெரும்பாலான விரைவு சாலைகள் இன்னும் பணி முடிந்து பயன்பாட்டுக்கே வராத சூழலிலும் சுங்க கட்டணத்தை முழுமையாக வசூல் செய்து வந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுளள இந்த புதிய விதிமுறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
நாளை (பிப்ரவரி 15-ம் தேதி) முதல் அமலுக்கு வரும் இந்த புது கட்டண குறைப்பு, நாடு முழுவதும் இருக்கும் பகுதியளவு மட்டும் செயல்படும் விரைவு சாலைகளுக்கும் பொருந்து. இது, விரைவுச்சாலை பயனர்களுக்கு பயணத்தை மலிவாக்குகிறது.
உதாரணத்திற்கு சென்னை பெங்களூரு விரைவு சாலையில் முடிக்கப்பட்ட பகுதிகளை பயன்படுத்தும் போது முன்பை விட 25% குறைவாக கட்டணம் செலுத்தினால் போதும். மேலும் இந்த புது அறிவிப்பு, வாகன ஓட்டிகள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது.