

நீட் (NEET) தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வு முறை, மாணவர்களின் சம வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களின் எளிதான அணுகல், மற்றும் தேர்வு முறையில் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தந்து வருவது நாடு முழுவதும் சாதாரண மக்களிடமும் நீட் குறித்த விழிப்புணர்வை ஊட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்திய டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் ஆதரவு தெரிவித்த முக்கிய பிரபலங்களில் சிலர்:
நடிகை அபிராமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாவது,‘ஜந்தர் மந்திரில் நடப்பது பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.. பல வருடங்கள் படித்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் குரலுக்கு தடியடியே பதிலாக கிடைத்துள்ளது.. ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்?.. உள்ளூர் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.. அனைவரும் தனது குரலை ஒலிக்க செய்யுங்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் பங்கேற்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நீட் தேர்வு முறை குறித்து விமர்சனங்களையும் முன்வைத்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வின் பிரச்னை நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியானது; நீட் தேர்வை நீக்க வேண்டிய நேரம் இது. நீட் மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமையைக் குறைத்தல், வணிகமயமாக்கலை ஒழித்தல், மற்றும் தரத்தை மேம்படுத்துதல். 3 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நீட் தேர்வால் உறுதி செய்ய முடியவில்லை.அது கற்றலின் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான். சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசு விழித்தெழ வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் – நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் NEET தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களின் இன்றைய ஹிந்து நாளிதழில் Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி – மாணவர்களின் கவலைகளை மத்திய அரசு கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என பதிவிட்டிருக்கிறார்..
தமிழகத்தில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து முதல்வர் விஜய் "நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்படி பலரும் மாணவர் அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தொவினோ தாமஸ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கையை கண்டித்தும் ஆர். மாதவன் தேர்வுக் கேள்வித்தாள் கசிவு மாணவர்களின் கனவுகளை பாதிக்கிறது என்றும், வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்வு முறை அவசியம் என்றும் பதிவிட்டார்.
இந்தியிலும் நடிகை ஷபானா ஆஸ்மி , இம்ரான் கான் ஆகியோர் டெல்லி மாணவர் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று ஆதரவு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் நடிகர் நசீருதீன் ஷா போன்ற பலரும் வெளிப்படையாக நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
தொடர்ந்து இன்றும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
குழந்தை அழும்போதே கவனிக்காமல் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதற்கு பதில், தடியடி கிடைத்தால் நாடு தோற்றதாகவே அர்த்தம். குழந்தை அழும்போதே கவனிக்காமல், நம் குழந்தைகள் பலர் இறக்கும் வரை காத்திருந்துவிட்டோம்; குழந்தைகள் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள்; அவர்களுக்கான கடமையை செய்வது நாட்டின் பொறுப்பு
சோனம் வாங்சுக், நீங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறீர்கள். எனவே, இந்தியாவின் மாணவர்களுக்காக உங்களுடைய உண்ணாவிரதத்தை நீங்கள் முடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்பானவர். உங்களது வேலையை நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நாடு உங்களுக்குத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. எங்களுடைய தோல்விகளை விட உங்களுடைய கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதன் பின்னால் அவர்களின் தனிப்பட்ட கனவுகள் மட்டுமல்லாமல், குடும்பங்களின் எதிர்பார்ப்புகளும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை என்றும், எதிர்கால தலைமுறைகளுக்கான சிறந்த பாதையை உருவாக்கும் நோக்கத்துடனும் குரல் எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் போராட்டத்தையும் உறுதியையும் சமூகம் கவனமாகக் கேட்க வேண்டிய நேரம் இது என்றும் ஆலியா பட் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.மாணவர்களின் எதிர்காலம் அவர்களுக்கே சொந்தமானது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
மேலும் நடிகர்கள் சித்தார்த், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் தங்கள் ஆதரவு பதிவுகளை முன்வைத்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார்.
நீட் தேர்வு போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நீட் தேர்வு தொடர்பான மாணவர் போராட்டங்கள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை என்றும் வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் தேர்வு முறைகேடு வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் (Fast-track Courts) அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்
அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மோடி தனது அறிக்கையில் ஏற்கவில்லை. இதனால் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போராட்டம் வெற்றி பெறுமா என நாடே ஆவலுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.