

இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், பெட்ரோலில் 85% எத்தனால் கலந்த E85 எரிபொருளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான வரைவு அறிக்கையை தயாரித்து வருகிறது. E85 என்பது 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் கலந்த கலவை. இது வாகன இன்ஜின்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கமான பெட்ரோலை விட அதிக ஆக்டேன் எண் கொண்டது, ஆனால் குறைந்த ஆற்றல் கொண்டது.
தற்போது இந்தியாவில் E20 பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் E20 பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. E20 பெட்ரோல் என்பது 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனால் கலந்த ஒரு சூழல் நட்பு எரிபொருளாகும். அதாவது ஏப்ரல் 1-ம்தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், 20 சதவிகித எத்தனால் கலந்த E20 பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏனெனில் 2023-க்கு பின் வாங்கிய வாகனங்களுக்கு E20 மிகவும் பாதுகாப்பானது. பழைய வாகனங்கள் பயன்படுத்துவதற்கு முன், வாகன உற்பத்தியாளரின் கையேட்டை (Owner's manual) சரிபார்ப்பது நல்லது.
இருப்பினும், மேற்கு ஆசிய நெருக்கடி, கச்சா எண்ணெய் விலை, அந்நிய செலாவணி உள்ளிட்ட காரணங்களால் மாற்று எரிபொருட்கள் மீதான கவனத்தைக் கூர்மையாக்கியுள்ளதால், மத்திய அரசு எத்தனால் 85 (E85) பெட்ரோலை ஊக்குவிக்கிறது.
அண்மையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தது. அதன் விலை, ஒரு டாலர் அதிகரித்தாலும், இந்தியாவிற்கு ரூ.16,000 கோடி இறக்குமதி
இந்தியாவில் மொத்த எத்தனால் தேவை 1,100 கோடி லிட்டராக உள்ள நிலையில், தேவைக்கு அதிகமாக 2000 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேலும் அதிகரிக்க எத்தனால் உற்பத்தியாளர் சங்கங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
E85 பெட்ரோலில் இயக்கும் வாகன விலை, உற்பத்தி செலவுகள், எரிபொருள் இருப்பு, வாகன மைலேஜ் உள்ளிட்ட பலவற்றின் பிரத்யேகமான வாகன சோதனைகள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
E85 பெட்ரோலால் வாகன ஓட்டிகளுக்கு என்ன பாதிப்பு?
E85 பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் சுமார் 30% வரை குறைய வாய்ப்புள்ளது.
சாதாரண பெட்ரோல் இன்ஜின்கள் இந்த எரிபொருளில் ஓடாது. ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் (Flex-fuel) இன்ஜின்கள் கொண்ட வாகனங்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அல்லாத வாகனத்தில் E85-ஐப் பயன்படுத்துவது அரிப்பை ஏற்படுத்தலாம், சீல்கள் மற்றும் குழாய்களைச் சேதப்படுத்தலாம், செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கலாம் மற்றும் ஸ்டார்ட் செய்வதில் சிக்கல்களை உருவாக்கலாம். ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களாக (FFV) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே E85-ஐப் பயன்படுத்த வேண்டும்.
ஆட்டோலேண்ட் யுஎஸ்ஏ-வின்படி, E85-க்காக உருவாக்கப்பட்ட ஒரு இன்ஜின், E60, E50 அல்லது சாதாரண E20 போன்ற குறைந்த கலவைகளிலும் பாதுகாப்பாக இயங்க முடியும்.
எத்தனால் விலை பெட்ரோலை விட குறைவாக இருந்தாலும், மைலேஜ் குறைவதால் பயணச் செலவு அதிகரிக்கலாம்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிக்கவும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 100% எத்தனாலில் இயங்கும் கார்களைப் பரிசோதித்து, சாத்தியக்கூறுகளை உறுதி செய்துள்ளார். இதற்கான சிறப்பு விநியோக உள்கட்டமைப்பு பெட்ரோல் பங்குகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தற்போதுள்ள E20 பெட்ரோலில் இருந்து வேறுபட்டு, E85 ஒரு தனி எரிபொருள் வகையாக அறிமுகப்படுத்தப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. E20 வகையில், எத்தனால் கலப்பு 27% வரை இருக்கலாம்.
எரிபொருளில் 85% எத்தனால் (E85)கலப்பதற்கு அனுமதிக்கும் வரைவு அறிவிக்கை தயாராக உள்ளது, அது விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய மூத்த அரசு அதிகாரி ஒருவர், இதில் அரசுக்கும், சந்தையிலும் ஒருமித்த கருத்து உள்ளதாகவும், E85 வாகனங்களுக்கான முதற்கட்ட சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.