

ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம் நாளை தொடங்குகிறது. மாதம் 1-ம்தேதி தொடங்கினாலே மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், வங்கி கணக்கு, சிலிண்டர் விலை என எந்தெந்த விஷயங்களில் மாற்றம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கும். அந்த வகையில் வருகிற மார்ச் மாதமும் சில முக்கியமான மாற்றங்கள் வருகின்றன. இந்த மாற்றங்கள் உங்களுடைய குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும். அந்த வகையில் மார்ச் 1 முதல் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதைப் பற்றி இனி பார்க்கலாம்.
சிலிண்டர் விலை :
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் (பிப்.01) ரூ.50 உயர்ந்து, ரூ.1899.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வீட்டு பயன்பாட்டிற்கான (14.2 கிலோ) சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50 காசுகள் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை (மார்ச் 1-ம்தேதி சமையல் கேஸ் விலையில் மாற்றம் வருமா அல்லது அதே விலையில் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் இடையே எழுந்துள்ளது.
CNG, PNG Prices: CNG, PNG விலைகளில் மாற்றம்
எல்பிஜி விலைகளைத் தவிர, விமானப் பயணக் கட்டணத்தை நிர்ணயிக்கும் ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) மற்றும் CNG, PNG ஆகியவற்றின் விலைகளும் உயரலாம் அல்லது குறையலாம். இந்த விலைகளும் பெரும்பாலும் மாதத்தின் முதல் நாள் அதிகரிக்கப்படுகின்றது.
வாட்ஸ்அப்பில் புதிய கட்டுப்பாடு
நாடு முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு வருகிறது. அதன்படி, இணையத்தில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்தும் போது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு முறை தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும். அதன்பின், மீண்டும் பயன்படுத்த QR code மூலம் லாக் இன் செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி, இந்தத் திட்டம் வரும் 1ம் தேதி(நாளை) முதல் அமலுக்கு வர உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
சிம் கார்டு!
அரசாங்கத்தின் சிம் பைண்டிங் விதி மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உங்கள் தொலைபேசியிலிருந்து சிம் கார்டை அகற்றினால் வாட்ஸ் ஆப் போன்ற செய்தி செயலிகள் வேலை செய்வதை நிறுத்திவிடும். நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள சிம் இல்லாமல் செயலிகளை பயன்படுத்துவது இனி சாத்தியமில்லை.
புதிய 'ரயில் ஒன்' செயலி:
இந்திய ரெயில்வேயின் டிஜிட்டல் சேவையான UTS மொபைல் ஆப் மார்ச் 1-ம்தேதி(நாளை) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் பயணிகள் RailOne செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ளுமாறு இந்திய ரெயில்வே அறிவுறுத்துகிறது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் IRCTC மூலமாகவும், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் UTS மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், RailOne செயலி இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும்.
Rail One ஆப் முன்பதிவு செய்யப்படாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவு, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள், நேரடி ரெயில் கண்காணிப்பு, PNR நிலை, பயண புதுப்பிப்புகள், ரெயிலில் உணவு ஆர்டர் செய்தல், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பல ரெயில்வே சேவைகளை ஒரே செயலியில் வழங்குகிறது. பயணிகள் இப்போது தொடர்ந்து செயலிகளை அடிக்கடி மாற்றும் தொந்தரவிலிருந்து விடுபடுவார்கள்.
வங்கிகளுக்கு மார்ச் விடுமுறை நாட்கள்
மார்ச் மாதம் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
மார்ச் மாதத்தில் ஹோலி, ஈத், குடி பத்வா, ராம நவமி போன்ற பண்டிகைகள் காரணமாக, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்படலாம். எனவே, உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி வேலைகள் நிலுவையில் இருந்தால், விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
PF கணக்குதாரர்களுக்குப் புதிய வசதி:
இதுவரை அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கு இருந்த சிக்கலான நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. மார்ச் முதல் ஊழியர்கள் தங்கள் PF பணத்தை ATM மற்றும் UPI செயலிகள் மூலமாகவே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகமாக உள்ளதால் இனிமேல் அவசரத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படும் ஊழியர்களுக்கு இந்த நடைமுறை பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
UPI மற்றும் வங்கிப் பாதுகாப்பு!
அதிகரித்து வரும் சைபர் கிரைம் மோசடிகளை தவிர்க்க டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பானதாக மாற உள்ளன. அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கூடுதல் பாதுகாப்பு சரிபார்ப்பை செயல்படுத்தியுள்ளன. நீங்கள் பெரிய தொகைகளை மாற்றினால் இப்போது உங்களுக்கு பயோமெட்ரிக்ஸ் அல்லது கூடுதல் அங்கீகாரம் தேவைப்படும்.
வாடகை வீடு!
2025-26-ம் ஆண்டிற்கான புதிய வாடகை விதிகளின்படி, மார்ச் 1 முதல் புதிய ஒப்பந்தங்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வருகின்றன.
வாடகை ஒப்பந்தங்களின் டிஜிட்டல் பதிவு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வைப்புத்தொகை அதிகபட்சம் இரண்டு மாத வாடகைக்கு மட்டுமே இருக்கும். மேலும், வீட்டு உரிமையாளர்கள் 24 மணிநேரத்துக்கு முன் அறிவிப்பு இல்லாமல் வீட்டிற்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது.
குழந்தைகளின் ஆதார் அட்டை புதுப்பிப்பது
5 மற்றும் 15 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஆதார் அட்டையில் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிப்பது (Mandatory Biometric Update - MBU) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு மார்ச் 1, 2026 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5-7 மற்றும் 15-17 வயதுக்குட்பட்டவர்களுக்கான அப்டேட், அருகில் உள்ள ஆதார் மையங்களில் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது. 5 வயதுக்கு முன் எடுக்கப்பட்ட "நீல நிற" (Bal Aadhaar) ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இந்த அப்டேட்டை செய்ய வேண்டும், இல்லையெனில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பள்ளிச் சேர்க்கை, தேர்வுகள் எழுதுவதில் சிரமம் ஏற்படலாம்.
ரேஷன் கார்டு KYC கட்டாயம்
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 1, 2026-க்குள் கண்டிப்பாக இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை முடிக்க வேண்டும். அவ்வாறு இ-கேஒய்சி செய்யத் தவறினால், ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படவோ அல்லது கார்டு ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உங்கள் பகுதி ரேஷன் கடைக்குச் சென்று, பயோமெட்ரிக் முறை மூலம் இதை உடனே செய்யலாம்.