

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் (New Labour Codes), வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓவர் டைம் (Overtime) வேலைக்கு வழக்கமான ஊதியத்தை விட இரண்டு மடங்கு (Double Pay) அதிக சம்பளம் கிடைக்கும். இந்த விதிமுறை தினசரி 12 மணிநேர வேலை மற்றும் காலாண்டு கூடுதல் நேர உச்சவரம்புகளை முறைப்படுத்துகிறது.
புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் ஊழியர்களின் வேலை நேரத்தைப் பொறுத்து அதிக நன்மைகளை வழங்கும் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிப்பது, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் வேலைவாய்ப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளர் சீர்திருத்தங்களின் முக்கிய தொகுப்பை இந்திய அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. ஓவர்டைம், அதாவது கூடுதல் பணி நேரத்துக்கு கூடுதல் ஊதியம் மற்றும் ஃப்ளோர் ஊதிய முறை போன்றவை அமலுக்கு வந்துள்ளன.
ஓவர்டைம் செய்பவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்குவது உண்மையான ஊதிய உயர்வைக் குறிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த முடிவு அதிக ஓவர்டைம் வேலை பொதுவாகக் காணப்படும் துறைகளில் (தொழிற்சாலைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தி போன்றவை) தொழிலாளர்களின் ஒட்டுமொத்த ஊதிய அளவை உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகின்றது.
புதிய சட்டத்தின்படி, ஊழியர்கள் ஓவர் டைம் என்ற பெயரில் கூடுதல் நேரம் வேலை செய்வதால் அவர்களுக்கு இரட்டிப்பு லாபமாக கிடைக்கும். ஏனெனில், ஏப்ரல் 1ம்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய ஊதியச் சட்டம், ஊழியர்கள் கூடுதல் வேலைக்குக் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், அலுவலகத்தில் உங்கள் ஷிப்டுக்குப் பிறகு நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்தால் உங்கள் நிறுவனம் உங்கள் சாதாரண ஊதிய விகிதத்தை விட இருமடங்கு உங்களுக்கு வழங்க வேண்டும். அதாவது, 1 மணிநேர கூடுதல் நேரத்திற்கு 2 மணிநேர ஊதியம் கிடைக்கும்.
ஷிப்ட் முடிந்த பிறகு, 15 முதல் 30 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் வேலை செய்தாலும், அது 30 நிமிடங்களாகக் கணக்கிடப்பட்டு, கூடுதல் நேர ஊதியத்திற்குத் தகுதியுடையதாக மாறும்.
தினசரி வேலை நேரம் 12 மணிநேரம் வரை இருக்கலாம், ஆனால் வாராந்திர வேலை நேரம் 48 மணிநேரத்திற்கு மேல் சென்றால் மட்டுமே ஓவர் டைம் கணக்கிடப்படும்.
இதுவரை பல நிறுவனங்கள் தங்களின் வரிச் சுமையைக் குறைக்க 'Basic Pay' (அடிப்படைச் சம்பளம்) குறைவாகவும், இதர படிகளை (HRA, Special Allowance) அதிகமாகவும் வைத்திருந்தன. புதிய விதிகளின் படி, இனி உங்கள் மொத்தச் சம்பளத்தில் (CTC) 'அடிப்படைச் சம்பளம்' என்பது கண்டிப்பாக 50% அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மீதமுள்ள 50% மட்டுமே இதர படிகளாக இருக்க முடியும்.
உங்கள் பி.எஃப் (PF) மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அடிப்படைச் சம்பளத்தை வைத்தே கணக்கிடப்படுகின்றன. அடிப்படைச் சம்பளம் உயரும்போது, உங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் தொகையும் உயரும். இதன் விளைவாக, உங்கள் மாதாந்திர கையில் கிடைக்கும் சம்பளம் சற்றுக் குறைவாக இருக்கலாம். ஆனால் உங்கள் எதிர்காலத்திற்காக (ஓய்வூதியம்) கணிசமான தொகை சேமிக்கப்படும். பி.எஃப் பங்களிப்பு அதிகரிப்பதால், வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் நீங்கள் கூடுதல் வரிச் சலுகை பெற முடியும்.
இந்த மாற்றம் குறுகிய காலத்தில் உங்கள் மாதாந்திர பட்ஜெட்டைச் சற்று பாதிக்கலாம். ஆனால், உங்கள் எதிர்காலப் பாதுகாப்பிற்கு இது ஒரு மிகச்சிறந்த முதலீடாக அமையும்.
அதேபோல் புதிய சட்டப்படி, ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில நிபந்தனைகளுடன் 1 ஆண்டு முடித்தாலே கிராஜுவிட்டி பெறும் வசதி அறிமுகமாகியுள்ளது.
மத்திய அரசு இந்த விதிகள் உங்கள் மாநில அரசு அறிவித்த பின்னரே உங்கள் மாநிலத்தில் பொருந்தும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பல மாநிலங்கள் தற்போது இதுகுறித்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.