

குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் ரயில் போக்குவரத்தையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை, அவ்வப்போது பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 48 புறநகர் ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் ரயில்களின் வருகை நேரம், புறப்படும் நேரம் மற்றும் பிளாட்பாரம் நம்பர் உள்ளிட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்னை கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தன. ரயில்கள் புறப்படும் நேரம் டிஜிட்டல் பலகையில் தெரிவதன் மூலம், அது பயணிகளுக்கு உதவியாக இருந்தது.
இந்நிலையில் முக்கிய ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் பலகைகளை பொருத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டு இருந்தது. இதன்படி தற்போது சென்னை கோட்டத்தில் உள்ள 48 புறநகர் ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
தினசரி சென்னையில் புறநகர் ரயிலை சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் பலகைகள் ரயில் பயணிகள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மற்றும் நெல்லூர் வரை இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விரைவு ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் மட்டுமே டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது புறநகர் ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டு இருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாதாரண ரயில் நிலையங்களில் ரயில்கள் வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வெளியாகும். சில சமயங்களில் ரயிலின் காலதாமதம் குறித்தும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் ரயில் எப்போது வரும் என்பதை முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்தப்பட்டு இருப்பது பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
பொதுவாக சாதாரண ரயில் நிலையங்களில் அடுத்த ரயில் எப்போது வரும் என்று ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது டிக்கெட் வழங்குபவரிடம் வழங்குபவரிடம் பயணிகள் கேட்பார்கள். தற்போது டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதால் இனி பயணிகள் அனைவரும் அதனைப் பார்த்து ரயில்களின் வருகை நேரம், காலதாமதம் மற்றும் பிளாட்பார்ம் நம்பர் ஆகியவற்றை மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்.