

ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தாலே அது மிகப்பெரிய விஷயமாகவே பார்க்கப்படும். குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வீட்டுமனை இருந்தால் அது மிகப் பெரிய சொத்தாகவே கருதப்படும்.
சொந்தமாக வீட்டுமனை வைத்திருப்பவர்கள் பட்டா மற்றும் பத்திரங்களை பதிவு செய்யும் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை பத்திரங்களை பதிவு செய்வதில் தமிழக அரசு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை பத்திரங்களைப் பதிவு செய்தால் அந்த பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதோடு, அவர்களின் மீது கிரிமினல் வழக்கும் பதியும் என பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பத்திரங்களை பதிவு செய்வது தடை செய்யப்பட்டது. ஆனாலும் சட்டத்திற்கு புறம்பாக அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பதிவுத்துறை.
இதன்படி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்தால், அந்தப் பத்திரங்கள் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி அவர்களின் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கை மூலமாக பதிவுத் துறை தலைவர் சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்த எச்சரிக்கை பலகைகளை சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை பத்திரங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாக கருதப்படும் நிலையில், இது பிற்காலத்தில் உங்களுக்கு பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். ஏனெனில் சட்டப்படி அந்த இடத்திற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாத சூழலில், வேறொருவர் நீதிமன்றத்தை நாடினால் உங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை பத்திரங்களை வைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற இயலாது. இது தவிர வீட்டுமனையை விற்பதிலும், பிற சொத்துக்களை வாங்குவதிலும் பல சிக்கல்கள் ஏற்படலாம்
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் மோசடி மற்றும் அபகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அந்த சொத்தை பயன்படுத்த முடியாமல் போவதோடு, எதிர்காலத்திலும் பாதுகாப்பு இருக்காது.
நிலத்தின் உரிமையாளர் இறந்த பிறகு, அவருடைய வாரிசுகளுக்கு இது யாருடைய சொத்து என்ற தெளிவான சட்டபூர்வ ஆதாரங்கள் இல்லாமல் போகும். இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பிரச்சனைகள் உண்டாகும்.
இதன் காரணமாக அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பத்திரப் பதிவுகளை ஏற்கக்கூடாது என சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை இம்மாதிரியான பதிவுகள் விண்ணப்பிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதியப்படும்.