

நாட்டின் இரண்டு மிகப்பெரிய நிதி நிறுவனங்களான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆகியவற்றில் பெருமளவிலான உரிமை கோரப்படாத மற்றும் செயல்படாத மக்கள் பணம் உள்ளது தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த இரண்டு அரசு நிறுவனங்களிலும் ரூ.16,450 கோடி பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் தெரிவித்ததாவது, 2026 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, எல்ஐசியின் உரிமை கோரப்படாத பாலிசி நிதிகளிலும் மற்றும் இபிஎஃப்ஓ-வின் செயல்படாத கணக்குகளிலும் மொத்தம் ரூ.16,649 கோடிக்கும் அதிகமான தொகை உரிமை கோரப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இந்தியாவின் மிகப்பெரிய அரசு காப்பீட்டு நிறுவனம் மற்றும் முதலீட்டுக் குழுமமாகும். இது தனிநபர் ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள், மைக்ரோ காப்பீடு மற்றும் யூலிப் (ULIP) போன்ற பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. எல்ஐசி பாலிசிகள் இந்திய அரசு உத்தரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால நிதிப் பாதுகாப்பை வழங்குகின்றன.
இதற்கிடையே எல்ஐசி பாலிசி முதிர்வடையும் தொகையை பெறமுடியாமல் போனால், அந்த தொகை எல்ஐசியால் ‘உரிமை கோராப்படாத தொகை’ (Unclaimed Amount) என்று ஒதுக்கி வைக்கப்படுகிறது. அதாவது பாலிசிதாரர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்டவர், பாலிசி முதிர்வடையும்போதோ, வாரிசுரிமைப் பலன் கிடைக்கும்போதோ அல்லது மரணம் ஏற்படும்போதோ தொகையைக் கோரத் தவறினால், அந்த நிதி ‘கோரப்படாத நிதி’யாகிவிடும்.
நிதி அமைச்சக தகவலின்படி, எல்ஐசியில் கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி பாலிசிதாரர்களிடம் இருந்து உரிமை கோரப்படாத ரூ.5,564 கோடி, உரிமை கோரப்படாத தொகையில் இருந்து பெறப்பட்ட வருவாய் ரூ.1753 கோடி என ரூ.7 ஆயிரத்து 318 கோடி உள்ளது.
அதாவது மார்ச் 31, 2026 நிலவரப்படி மொத்தம் ரூ.7,318.50 கோடி உரிமை கோரப்படாத நிதி உள்ளது.
அசல் உரிமை கோரப்படாத தொகை: ரூ.5,564.55 கோடி (பாலிசிதாரர்களுக்குச் சேர வேண்டியது).
ஈட்டப்பட்ட வட்டி/வருமானம்: ரூ.1,753.95 கோடி, இது உரிமை கோரப்படாத இந்தத் தொகைக்குக் காலப்போக்கில் ஈட்டப்பட்ட வட்டியாகும்.
பாலிசிதாரர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வராததால் இவ்வளவு பெரிய தொகை தற்போது LIC நிறுவன நிர்வாகத்தின் கீழ் முடங்கிக் கிடக்கிறது.
அதேபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இதே காலகட்டத்தில் ரூ.9 ஆயிரத்து 330 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது. விதிகளின்படி, ஒரு ஊழியர் ஓய்வுபெறும்போதோ அல்லது வேலையை மாற்றும்போதோ தொடர்ந்து 36 மாதங்களுக்கு (மூன்று ஆண்டுகள்) அந்தக் கணக்கில் புதிய பங்களிப்புகள் எதுவும் செலுத்தப்படாவிட்டால் அந்த பிஎஃப் கணக்கு "செயல்பாட்டில் இல்லாத கணக்கு" (inoperative account) என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்தக் காலத்திற்குப் பிறகு அத்தகைய கணக்குகளுக்கான வட்டி சேர்வதும் முழுமையாக நின்றுவிடுகிறது.
தகுதிவாய்ந்த பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக எல்ஐசி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக பெரும்பாலானவர்கள் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது தங்கள் பழைய பிஎஃப் கணக்கை மாற்றுவதையோ அல்லது அதை முடிப்பதையோ (close) பெரும்பாலும் மறந்துவிடுவதாக நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பவர்கள் அதுகுறித்த தகவலைத் தங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது நாமினிக்கோ (வாரிசுதாரர்) தெரிவிப்பதில்லை. அல்லது நாமினி விவரங்கள் முறையாகப் புதுப்பிக்கப்படுவதில்லை. முகவரி மாற்றம், வங்கி விவரங்களில் உள்ள பிழைகள், பழைய ஆவணங்கள் இல்லாதது மற்றும் நிதிசார் விழிப்புணர்வு இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் கோரப்படாத நிதிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
EPFO மற்றும் LIC ஆகிய நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் கோரப்படாத தொகையை ஆன்லைன் மூலம் கண்டறியும் வசதியை வழங்கி உள்ளது. இதன் மூலம் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும்.
எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்கள் பணத்தை எப்படி கண்டுபிடிப்பது?:
எல்ஐசியில் உங்களுடைய உரிமை கோரப்படாத பணம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க LIC Unclaimed Policyholder Amount என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள 'Unclaimed Policyholders' Dues' என்ற பகுதியில் உங்களுடைய பாலிசி எண், பிறந்த தேதி மற்றும் பான் (PAN) அட்டை எண் ஆகிய விவரங்களை உள்ளிட்டு உங்கள் பணம் நிலுவையில் உள்ளதா எனச் சரிபார்த்து கொள்ளலாம்.
EPFO பாலிசிதாரர்கள் தங்கள் பணத்தை எப்படி கண்டுபிடிப்பது?:
EPFO-ல் 'உரிமை கோரப்படாதவை' (Unclaimed) என்ற தனிப்பிரிவு இல்லை, அதற்குப் பதிலாக 36 மாதங்களுக்கு மேல் பரிவர்த்தனை இல்லாத கணக்குகள் 'செயலற்ற கணக்குகள்' (Inoperative Accounts) என்று வகைப்படுத்தப்படுகின்றன.
உங்கள் கணக்கில் முடங்கியுள்ள பணத்தை ஆன்லைனில் சரிபார்க்க மற்றும் எடுக்க EPFiGMS அல்லது EPFO Member Passbook என்ற அதிகாரப்பூர்வ தளத்தைப் பயன்படுத்தலாம்.