

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கும் நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய 8 நாட்கள் கால அவகாசம் இருந்தாலும், இதில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். ஏனெனில் 4 நாட்கள் பொது விடுமுறை என்பதால் அந்த நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.
இந்நிலையில் வேட்பாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை SUVIDHA இணையதளத்தில் பூர்த்தி செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள்:
1. மார்ச் 31 - முழுவருட கணக்கு முடிவு
2. ஏப்ரல் 1 - மஹாவீர் ஜெயந்தி
3. ஏப்ரல் 3 - புனித வெள்ளி
4. ஏப்ரல் 5 - ஞாயிற்றுக்கிழமை.
வேட்புமனுத் தாக்கல் செய்ய விதிமுறைகள்:
* விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், மூன்று வாகனங்களில் வரவேண்டும்.
* தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து, சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
* வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளருடன் மூன்று பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் வரவேண்டும்.
* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரிலோ அல்லது ஆன்லைனிலோ சமர்ப்பிக்கலாம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்கால் தொகுதியிலும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.
தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பெரம்பூர், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்கிறார். விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், தொண்டர்கள் யாரும் தவெக வாகனத்தை பின்தொடர வேண்டாம் என விஜய் அறிவுரைத்துள்ளார்.
மேலும் பிரச்சார கூட்டத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் யாரும் பங்கேற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. * மூன்று மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் படிவத்துடன் இணைக்க வேண்டும்