வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்து சிதறியது!

வடகொரியாவின்  உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்து சிதறியது!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

வடகொரியா அதன் முதல் உளவு செயற்கைக் கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக அறிவித்து இருக்கிறது. இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ராக்கெட் நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் விழுந்தது.

வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நீண்ட தூர ஏவுகணை தொழில் நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இருப்பினும் இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக் கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து இருக்கிறது.

உளவு செயற்கைக் கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர் கொண்டு நடுவானில் வெடித்து சிதறியது. இது கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது. வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக வடகொரியாவின் உளவு செயற்கைக் கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

வடகொரியா கடந்த வருடம் மட்டும் 100க்கும் அதிகமான ஏவுகணைகளை சோதனை செய்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com