
இந்தியா உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சில சம்பவங்களை பார்க்கும் போது இந்தியா முன்னேறி விட்டது என்று சொல்வதெல்லாம் வெறும் உதட்டலவில் தான் இன்னும் இருக்கிறது என்று தோன்றுகிறது.
ஏனெனில் நம் நாட்டில் உள்ள மக்கள் இன்னும் முன்னேறாமல் பழமையில் தான் ஊறிக்கிடக்கின்றனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான அநீதிகளும், கொடுமைகளும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளும், மரியாதையும் மறுக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் தாழ்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது நடப்படும் கொடூர தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு கொடூரமான மனதை பதபதைக்கும் சம்பவம் தான் ஒடிசாவில் நடந்துள்ளது.
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதற்காக ஒரு இளம் ஜோடியை ஊர் மக்கள் கொடூரமாக தாக்கி உள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ளது கஞ்சமஜிரா (Kanjamajhira) என்ற கிராமம். நியாம்கிரி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மிகவும் பழமைவாதிகள். இவர்கள் சமீபத்தில்தான் நாகரீக தாக்கங்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது அந்த கிராம வழக்கப்படி மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஊரார் எதிர்ப்பை மீறி சொந்த அத்தை மகனை இளம்பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் திருமணம் செய்த நபர் அந்தப் பெண்ணின் தந்தைவழி அத்தையின் மகன் என்பதால் கிராமவாசிகள் அவர்களின் முடிவை எதிர்த்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காதலித்து திருமணம் செய்த அந்த இளம் ஜோடியை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மாடுகளுக்கு பதிலாக அவர்களை ஏர் கலப்பையில் கட்டிவைத்து வயலில் உழச் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மாட்டை அடிப்பதைப்போன்று, இளம்ஜோடிகளை இரண்டு பேர் கம்பால் அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். இவை அனைத்தையும் ஊர் மக்கள் கூடி நின்று அமைதியாக வேடிக்கை பார்த்தனர். யாரும் தடுக்க முன்வரவில்லை என்பது தான் கொடூரத்தின் உச்சகட்டம்.
இறுதியாக கிராம பஞ்சாயத்து இந்த ஜோடிக்கு அபராதமாக ரூ.1000 விதிக்கப்பட்டது. பின்னர் இந்த ஜோடியை நிரந்தரமாக கிராமத்தில் இருந்து வெளியேற்றினர். சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பரவலாக கவனத்தை ஈர்த்த பின்னரே தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் பிஸ்வநாத் குர்ஷிகா கூறியதாவது, ‘அனைவரிடமும் கலந்தாலேசித்த பிறகு, எங்கள் சமூகத்தில் பாரம்பரிய நீதி வடிவமான 'கலப்பை தண்டனை'யை இந்த ஜோடிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
கிராம வழக்கத்தை தவறிய இவர்களை நாங்கள் மன்னித்திருந்தால், எங்கள் குலதெய்வம் கிராமத்தை சபித்திருக்கும்’ என்று அவர் கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், விசாரணை நடத்துவதற்காக ஒரு குழு கிராமத்திற்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் எஸ். சுவாதி குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் இதேபோன்று, ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த 40 பேர், ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அவர்கள் தலையை மொட்டையடித்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தில் நிலவும் இதுபோன்ற கண்மூடித்தனமாக மூட நம்பிக்கைகள் மற்றும் சாதி, மத வேறுபாடுகள் காரணமாக தான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற செயல்கள் மனித உரிமை மீறல் மட்டுமின்றி கடுமையாக தண்டடைக்குரியதாகும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைவரும் சமம்...இந்த உலகில் யாரையும் அவமானப்படுத்தவோ, தண்டிக்கவோ எவருக்கும் உரிமையில்லை....