மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் சுற்றில் மஞ்சள் நிற உடை அணிந்த வீரர்கள் காளைகளைப் பிடித்து வருகின்றனர். காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை தற்போது கொண்டாடப்படுகின்றது. தை 1ம் தேதிக்கு முந்தைய தினம் போகிப் பண்டிகை, தை ஒன்றாம் தேதி சூரியன் பொங்கல், தை இரண்டாம் தேதியில் மாட்டுப்பொங்கல், தை மூன்றாம் தேதி காணும் பொங்கல் என 4 நாட்களும் கொண்டாட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி:
தை இரண்டாம் தேதியான இன்று மாட்டுப் பொங்கலினை மக்கள் வெகு விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முதலே மதுரை அவனியாபுரம் பகுதியில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதன் பிறகு பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்த இடங்களில் இன்று நடைபெறுகிறது..
மாடுகள் மற்றும் வீரர்களுக்கு பரிசோதனை:
இரண்டாம் கட்டமாக இன்று பாலமேடு மஞ்சமலையில் அமைந்துள்ள வாடிவாசலில் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. மாடுபிடி வீரர்களுக்கு உடற்பகுதி பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள மாடுகள் மற்றும் வீரர்கள் மது அருந்தி உள்ளார்களா மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தியுள்ளார்களா எனவும் தீவிர பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
அமைச்சர் மூர்த்தியும், ஆட்சியர் சங்கீதாவும் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனையில் எடை, உயரம், ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றது.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி ஒரு சில நிமிடத்திலேயே மாடு பிடி வீரர்கள் தடுப்புகளை உடைத்து உள்ளே வருவதற்கு முயற்சி செய்தனர். இதனால் காவல்துறையினர் அப்பகுதிக்கு வருகை தந்தனர். அவர்களை கண்டதும் மாடுபிடி வீரர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
வெளிநாட்டை சேர்ந்தவர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வருகை தந்துள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகள் களமிறங்கும் நிலையில் 7 கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டன.
பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று தொடங்கிய நிலையில் போட்டியில் முதல் சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு அடுத்தடுத்து சுற்றுகள் நடைபெறும் நிலையில் அதிகளவு காளைகளைப் பிடிக்கும் வீரருக்கு பரிசு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.