பக்தர்கள் கவனத்திற்கு: பழனி கோவிலில் செப்டம்பர் 12 முதல் மீண்டும் ரோப்கார் சேவை தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரோப்கார் சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி ரோப்கார்
palani temple rope carimage credit-palani.in, @secret_temples
Updated on

தமிழ்நாட்டில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோவிலின் முதன்மைச் சிறப்பே இதன் மூலவர் திருமேனிதான். நவபாஷாணம் எனப்படும் ஒன்பது வகையான அபூர்வ நச்சுப் பொருட்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, உலக நன்மைக்காகப் போகர் என்ற சித்தர் இச்சிலையை உருவாக்கிப் பிரதிஷ்டை செய்தார். இத்தலத்தின் உற்சவராக முத்துக்குமாரசாமி அருள்பாலிக்கிறார்.

தமிழகத்தில் முருகன் கோவில்களில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக மேற்கொள்ளும் அலகு குத்துதல் மற்றும் காவடி எடுத்தல் ஆகிய வழிபாட்டு முறைகள் முதன்முதலில் தோன்றியது பழனிம்பதியில்தான்.

இங்கிருந்தே மற்ற கோவில்களுக்கும் பரவியது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 450 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கோவிலை அடைய பக்தர்கள் 690 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். புராணக் காலங்களில் இத்தலம் 'திருஆவினன்குடி' என்றும் 'தென்பொதிகை' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாகக் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பழனி மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை மற்றும் யானைப்பாதை பிரதான வழிகளாக அமைந்திருந்தாலும், பக்தர்கள் விரைவாகவும் மலையின் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்வதற்கு ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் (Winch) சேவைகள் பெருமளவில் பயன்படுகின்றன. இதில் ரோப்கார் பயணம் பக்தர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தையும் வழங்குவதால், பெரும்பாலானோர் இதையே தேர்வு செய்து வருகின்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, ரோப்கார் நிலையத்தில் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர புனரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 20-ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பழனி கோவில்
பழனி கோவில்

ஜூலை 20 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்ற பராமரிப்புப் பணி காலகட்டத்தில், புதிய பெட்டிகள் பொருத்துதல், கயிறுகளின் உறுதியைச் சரிபார்த்தல், புனரமைப்பு மற்றும் சுமை சோதனை ஓட்டங்கள் (Trial Run) உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்தன. ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டிருந்த நாட்களில், பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின்இழுவை ரயில்களைப் பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தற்போது அனைத்துச் சோதனை ஓட்டங்களும் வெற்றிகரமாக முடிவடைந்து ரோப்கார் இயங்கத் தயார் நிலையில் உள்ளதால், வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரோப்கார் சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பழநி முருகன் கோவில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்!
பழனி ரோப்கார்

இந்த அறிவிப்பால் பழனிக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி கோவில் தல வரலாறு:

ஒருமுறை நாரத முனிவர் சிவபெருமானுக்கு அரிதான 'ஞானப்பழத்தை' பரிசாக அளித்தார். அதைத் தன் மகன்களான விநாயகருக்கும் முருகனுக்கும் பகிர்ந்தளிக்க பார்வதி தேவி விரும்பினார். ஆனால், பழத்தைப் பிளந்தால் அதன் மகிமை குறையும் என்பதால், சிவபெருமான் ஒரு போட்டியை அறிவித்தார். "யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே இந்த ஞானப்பழம்" என்றார்.

முருகப்பெருமான் உடனடியாகத் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றி வரப் புறப்பட்டார். ஆனால் விநாயகரோ, பெற்றோரே உலகம் எனக் கருதி சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார்.

உலகைச் சுற்றிவிட்டு வந்த முருகன், பழம் விநாயகருக்கு வழங்கப்பட்டதைக் கண்டு கோபம் கொண்டு, பெற்றோர் மற்றும் கைலாயத்தை விட்டுப் பிரிந்து தண்டாயுதபாணியாக இம்மலையில் வந்து நின்றார்.

இதையும் படியுங்கள்:
வாரணாசியில் மே மாதத்திற்குள் ‘ரோப் கார்’ சேவை... இனி 1 மணி நேரப் பயணம் 15 நிமிடத்தில்!
பழனி ரோப்கார்

அவரைச் சமாதானப்படுத்த வந்த பார்வதி தேவியும் சிவபெருமானும், "முருகா, ஞானப் பழமே நீதான்" (பழம் + நீ) எனக் கூறியதால் இத்தலம் 'பழனி' என்று பெயர் பெற்றது.

logo
Kalki Online
kalkionline.com