

ராஜஸ்தானின் பெஹ்ரோர் நகரில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாம்பு கடித்தவரின் குடும்பத்தினர், தாக்குதலுக்கு காரணமான உயிருள்ள பாம்பை எடுத்துக் கொண்டு மாவட்ட மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பீதி ஏற்பட்டது.
கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தின் மன்சல் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, 35 வயதான பிஜேந்திர யாதவ் என்பவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்துக் கொண்டிருந்தபோது கருநாகப்பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது.
காலை சுமார் 11 மணியளவில் பிஜேந்திரா ஒரு சேமிப்பு அறையிலிருந்து கால்நடை தீவனத்தை வெளியே எடுத்து கொண்டிருந்தபோது, ஒரு சாக்கு மூட்டையின் அடியில் மறைந்திருந்த நாகப்பாம்பு திடீரென அவரது வலது கால் விரலில் கடித்தது. கடித்ததில் ரத்தம் வழிந்தது. அவருடைய சத்தமான குரலை கேட்டு அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அருகிலிருந்த கிராம மக்களும் ஓடி வந்தார்கள்.உடனடியாக அவரை சிகிச்சைக்காக பெஹ்ரோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
மருத்துவமனையில்,மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவரை கடித்த பாம்பின் இனத்தை பற்றி கேட்டார்கள்.பாம்பின் இனத்தை அடையாளம் காணவும், பொருத்தமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் உதவும் வகையில்,அதனுடைய புகைப்படம் இருந்தால் காட்டுமாறு மருத்துவ பணியாளர்கள் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.முதலில்,அந்த குடும்பத்தினர் தங்கள் கைபேசியில் அந்த குறிப்பிட்ட பாம்பின் இனப் படத்தை மருத்துவர்களிடம் காட்டினார்கள். ஆனால், தீடிரென சற்றும் எதிர்பாராத விதத்தில், சில கிராமவாசிகள் அந்த நாகப்பாம்பைப் பிடித்து, ஒரு சாக்கு பைக்குள் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்கள்.
மருத்துவமனை வளாகத்திற்குள் உயிருள்ள நாகப்பாம்பு ஒன்றை கொண்டு வந்த செய்தி பரவியதும், நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. சிலர் அந்த பாம்பை காணும் ஆர்வத்தில் இருந்தார்கள்.மற்றவர்களோ அச்சத்தில் மருத்துவமனையை விட்டு ஓடினார்கள்.
பிறகு அந்த நாகப்பாம்பை சாக்கிலிருந்து கவனமாக ஒரு பாதுகாப்பான பிளாஸ்டிக் கொள்கலனுக்கு மாற்றினார்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், பாம்பு கடித்த சிறிது நேரத்திலேயே நோயாளி மருத்துவமனைக்கு கொண்டுவரபட்டதாகவும், உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டதாகவும் கூறினார்கள். சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட மருத்துவ கவனிப்பு விரைவான சிகிச்சைக்கு உதவியதாகவும் அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவத்தை அடுத்து, பாம்பு கடித்த பிறகு அதை பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்த மருத்துவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். கடித்த பாம்பின் இனத்தை அடையாளம் காண்பது சிகிச்சைக்கு உதவும் என்றாலும், கடினமான விஷத்தை கொண்டிருக்க வாய்ப்பு இருக்கும் என்கிற காரணத்தினால் அதை பாதுகாப்பான தூரத்திலிருந்து புகைப்படம் எடுத்து கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், நோயாளியுடன் கருநாகத்தையும் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததைக் கண்டு பலர் ஆச்சரியம் தெரிவித்துள்ள நிலையில், இந்த அசாதாரண சம்பவம் மன்சல் கிராமத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெரும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.