

நாட்டில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பது போலவே, குழந்தைகள் கடத்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டிற்கும் நம்முடைய கவனக்குறைவே முக்கிய காரணம் என்பதால், தங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி பெற்றோர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தவறான செயல்களில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளை கடத்தும் ஒரு மெகா கும்பல் பற்றிய தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதன்படி வட மாநிலங்களில் கடத்தப்படும் குழந்தைகள், ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக தகவல் கூறுகின்றன. கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, தமிழ்நாட்டிலும் ஒருசிலர் குழந்தை கடத்தல் கும்பலுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.
குழந்தை கடத்தல் கும்பல் மீதான வழக்குகளை போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்திய அளவில் 60-க்கும் மேற்பட்டடோர், இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளை கடத்தி வரும் ஏஜெண்டுகளுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் கமிஷன் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்திய அளவில் மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படும் குழந்தை கடத்தல் கும்பல், வடமாநிலங்களில் தான் அதிகளவிலான குழந்தைகளை கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக மும்பை, புனே மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட வடமாநில நகரங்களில் தான் குழந்தை கடத்தல் வழக்குகள் அதிகளவு பதிவாகி உள்ளன.
மருத்துவமனைகள், சாலை மற்றும் ரயில்வே பிளாட்பாரங்களில் தான் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் கடத்தப்படும் குழந்தைகளை, தமிழ்நாட்டிற்கு ரயில் மூலம் அழைத்து வருகின்றனர். இதில் ஆண் குழந்தைகளை ரூ.5 லட்சத்திற்கும், பெண் குழந்தைகளை ரூ.4 லட்சத்திற்கும் விற்பனை செய்கின்றனர். குழந்தை கடத்தலும், குழந்தைகளை விற்பனை செய்வதும் சத்தம் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். இந்த வழக்கில் தற்போது சேலத்தைச் சேர்ந்த ரமேஷ், அவரது இரண்டாவது மனைவியான நித்யா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குழந்தையை கடத்தி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சேலத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ப்ரவீன், சகோதரிகள் ஜானகி மற்றும் செல்வியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வீட்டில் 8 மாத பெண் குழந்தை மற்றும் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை என 2 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டனர்.
சென்னையைச் சேர்ந்த ஷபானா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகியோரின் கை அசைவுக்கு ஏற்பவே சேலத்தில் குழந்தை கடத்தல் நடந்துள்ளது. மேலும் கொடைக்கானலில் உள்ள உமா மகேஷ்வரியும் இந்தக் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டு வருகிறார். தலைமறைவாக உள்ள இம்மூவரையும் கடத்தல் ராணிகள் என போலீசார் பெயரிட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைகளில் கைக் குழந்தைகளை பெற்றோர்களும், உறவினர்களும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி போலீசார் அறிவுரைத்துள்ளனர். மேலும் குழந்தைகளை வெளியில் தனியாக அனுப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.