

பொதுமக்களை கவரும் விதமாக உணவுப் பொருட்களில் நிறமிகள் சேர்க்கப்படுவது வழககமானது தான். இருப்பினும் நிறமிகளை சேர்க்கும் போது, அரசு வகுத்துள்ள உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியதும் அவசியம். ஆனால் பல நிறுவனங்கள் நிறமிகளைப் பயன்படுத்தும் போது, விதிமுறைகளை மீறி செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி மலிவான விலையில் கிடைக்கும் நிறமிகளை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இதன் காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிவப்பு நிறம் கொண்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிறமியால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
‘RED DYE #3’ என்ற நிறமியை பெரும்பாலான நிறுவனங்கள் உணவுப் பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இந்த நிறமி மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் தான், பல நிறுவனங்கள் இதனை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. விலை மலிவாக இருக்கும் அதே வேளையில், இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் RED DYE #3 நிறமியை எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதன் காரணமாக இந்த நிறமியை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் தடை செய்தன.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட், கேக், குளிர்பானங்கள் மறறும் ஸ்நாக்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களில், RED DYE #3 நிறமி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ
இந்நிலையில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் குறித்து பெற்றோர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்காமல், உடலுக்கு நல்லவற்றை மடடும் வாங்கிக் கொடுங்கள்.
குறிப்பாக உடலுக்கு எது நல்லது, எது கெட்டது என்பது குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது
RED DYE #3 (சிவப்பு நிறமி 3 - எரித்ரோசின்) என்பது பெட்ரோலியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு செயற்கை நிறமி. இந்த நிறமி உணவுகள், சாக்லேட்ஸ் மற்றும் குளிர்பானங்களுக்கு பிரகாசமான செர்ரி-சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
இந்த நிறமி எலிகளில் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துவதோடு, மனிதர்களுக்கும் உடல் பாதிப்புகளை ஏறபடுத்தும். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த நிறமி குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சாக்லேட்ஸ், சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் வாங்கும் போது, லேபிள்களில் ‘Red 3’ அல்லது Erythrosine பெயர் உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இந்தப் பெயரை நீங்கள் பார்த்தால், அந்த உணவுப் பொருளை வாங்காமல் தவிர்ப்பது தான் நல்லது.