

இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 6 முறை உயர்ந்தது. அதன் பிறகு நேற்று (மே 28) பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 பைசா குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலையைப் போலவே பெட்ரோல் விலையிலும் தினசரி மாற்றம் நிகழ்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. மேலும் ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், அவ்வழியே வர வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே தற்போது உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்த காலகட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்க, கடந்து மார்ச் 27-ம் தேதி மத்திய அரசு கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது.
அசாதாரண சூழ்நிலையிலும் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காமல் இருக்கின்றன. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
நேற்று (மே 28) ஒரு லிட்டர் பெட்ரோல் 43 பைசா குறைந்து இன்று ரூ.107.77-க்கு விற்பனையானது. ஒரு லிட்டர் டீசல், 40 பைசா குறைந்து ரூ.99.55-க்கு விற்பனையானது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இன்று பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 பைசா உயர்ந்து ரூ.108.01-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் 23 பைசா உயர்ந்து ரூ.99.78-க்கு விற்பனையாகிறது. சிஎன்ஜி விலையில் மாற்றமின்றி ரூ.95-க்கே விற்பனையாகிறது
தங்கத்தின் விலையைப் போலவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் தினசரி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இருநாட்டு தரப்பிலும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
தற்போது 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஹார்மூஸ் நீரிணை திறக்கப்பட்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிச்சயமாக குறைந்து விடும். அதற்கு ஒரே வழி, ஹார்மூஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் வழிவிட வேண்டும்.