

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிகரித்து வரும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளை ஈடுகட்ட, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயரக்கூடும் என்று கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு, அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று கூறியுள்ளது.
வரும் ஏப்ரல் 29-ம்தேதி மேற்கு வங்காளத்திற்கான இரண்டாம் கட்ட சட்டமன்றத்தேர்தல் முடிந்தவுடன் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் கடுமையாக உயரக்கூடும் என்று சமீபத்தில் கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் (OMCs) மீது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கோடக் அறிக்கை சுட்டிக்காட்டியதுடன், அதிகரித்து வரும் இழப்புகளை ஈடுகட்ட தேர்தல் காலத்திற்குப் பிறகு விலை திருத்தம் அவசியமாகலாம் என்றும் கணித்திருத்தது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், எண்ணெய் இறக்குமதியின் அளவு 13-15% குறைந்திருந்தாலும், விலை உயர்வின் காரணமாக இறக்குமதிச் செலவு ஒரு நாளைக்கு சுமார் $190-210 மில்லியன் அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூ.270 பில்லியன் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் $120 என்ற அளவில் நீடிக்கும் என்ற அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 உயரக்கூடும் என்று கோடக் கணித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்தால் அதனுடன் சேர்ந்து பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணம், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களின் விலைகளும் உயரும் என்பதால் சமானிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்திருந்தது. ஆனால் அவை சுத்திகரிப்பு நிலையங்களின் இழப்புகளை முழுமையாக ஈடுசெய்ய முடியவில்லை. ஆகையால், விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாகி வருகின்றன.
விலை உயர்வுக்கு வலுவான காரணங்கள் இருந்தாலும், அதன் நேரம் முற்றிலும் அரசியல் காரணிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்த பின்னர் எண்ணெய் நிறுவனங்கள் விலைகளைத் திருத்தி அமைக்க வாய்ப்புள்ளது என்று கோடக் பகுப்பாய்வு செய்துள்ளது.
இதற்கிடையே தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 உயரக்கூடும் என பரவும் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்று அமைச்சகம் கூறியதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை இருந்தபோதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா மட்டுமே என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியது.
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு மத்தியில், சர்வதேச விலைகளில் ஏற்படும் கடுமையான உயர்வுகளிலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்களுடன் (PSUs) இணைந்து இடைவிடாத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. "மத்திய கிழக்கு நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலையில் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது," என்று அமைச்சகம் சமீபத்திய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட இடையூறுகளே உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். எரிசக்திப் போக்குவரத்திற்கான இந்த முக்கியப் பாதை, இராணுவத் தலையீட்டால் தடுக்கப்பட்டதால், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்புடன் உயர் திறனில் இயங்கி வருவதாகவும், அதே நேரத்தில் நாட்டில் போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் உயர் தொழில்நுட்ப மையத்தால் (CHT) நிர்ணயிக்கப்பட்டபடி, முக்கியத் துறைகளுக்கு C3 மற்றும் C4 வகைகளின் குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவுகளைக் கிடைக்கச் செய்ய, பெட்ரோ கெமிக்கல் வளாகங்கள் உள்ளிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.