

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஹார்மூஸ் ஜலந்தியை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் கப்பல்களுக்கான வழி அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க E20 பெட்ரோலை இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் 20%-க்கும் மேல் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரியை நீக்கியுள்ளது மத்திய அரசு.
20% எத்தனாலை பெட்ரோலில் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதோடு, கரும்பு விவசாயிகளுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும் எனும் மத்திய அரசு தெரிவித்தது.
தற்போது 20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்தியா வெற்றிகரமாக எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எத்தனால் கலந்த பெட்ரோலை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்க தற்போது கலால் வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது மத்திய அரசு. இதன்படி 20%-க்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மத்திய அரசின் கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் E30 பெட்ரோலின் விலை ரூ.11. 90 வரை குறைய வாய்ப்புள்ளது.
30% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கான இலக்கு வெற்றியடையும் பட்சத்தில், மத்திய அரசு எத்தனால் சதவிகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை வெற்றியடைந்த நிலையில், இந்தியாவின் அடுத்த இலக்கை நோக்கிய பயணம் தற்போது தொங்கியுள்ளது.
நோக்கம்:
அந்நிய செலவாணியை சேமித்தல், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தல், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுத்தல் மற்றும் கரும்பு விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதே கலால் வரி நீக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
மத்திய அரசின் இந்த வரி விலக்கைப் பெறுவதற்கு எத்தனால் கலந்த பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) விதிமுறைகளுக்கு உட்பட்டு இருத்தல் அவசியம்.
கலால் வரி நீக்கப்பட்டதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்கள் எத்தனால் கலந்த எரிபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். அதோடு எரிபொருள் தட்டுப்பாடு குறையும். இதன்மூலம் மாற்று எரிபொருளுக்கான வழியும் கிடைக்கும்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய 2 எரிபொருள்களும் ஜிஎஸ்டி வரி வரம்பிற்கும் வரவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசுகள் வாட் வரியையும் விதித்துள்ளன.
பெட்ரோல் மீதான கலால் வரி தற்போது ரூ.3 ஆக வசூலிக்கப்படுகிறது. கடைசியாக கலால் வரி கடந்த மார்ச் மாதத்தில் குறைக்கப்பட்டது. ஆனால் டீசலுக்கு மத்திய அரசு எவ்வித காலால் வரியையும் விதிக்கவில்லை.
தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு 13% மற்றும் டீசலுக்கு 11% வாட் வரி விதிக்கப்பட்டுள்ளன.
எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தினால் மைலேஜ் குறையும் எனற கருத்துகளும் இணையத்தில் பரவின. இருப்பினும் இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்த தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.