

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போரால் உலகின் பொருளாதார நிலையில் மாற்றங்கள் மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. போர் காரணமாக குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக பாதிப்புகளால், உலகில் முதல் நாடாக எரிபொருள் அவசரநிலையை (Fuel Emergency) அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 98 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நாடான பிலிப்பைன்ஸ், இதனால் கடுமையான தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது.
குறிப்பாக பிலிப்பைன்ஸில் அடுத்த 45 நாட்களுக்கு மட்டுமே தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு பெட்ரோல், டீசல் விலை இருமடங்காக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்து "நாட்டின் எரிசக்தி விநியோகத்தை பெறும் தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை சுட்டிக்காட்டி, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நிர்வாக ஆணையில் தான் கையெழுத்திட்டுள்ளதாக" வும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆணையின் கீழ், எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்தைக் கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டு விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக எரிபொருள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை பிரகடனம் ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். தேவைப்பட்டால் அதிபரால் இது நீட்டிக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் பிலிப்பைன்ஸ்ல் எரிபொருள் விநியோகத்தை சீராக்கவும், இருப்புக்களை பாதுகாக்கவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிர்வாக ஆணை (Emergency) மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தருவதாக அமைந்துள்ளது.
அவசரநிலை அறிவித்த பிலிப்பைன்ஸ் நாட்டினைத் தொடர்ந்து இலங்கை, மியான்மர், பூட்டான், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாட்களிலும் எரிபொருள் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போர் முடிவுக்கு வராமல் இதே நிலை நீடித்தால் பல நாடுகளில் லாக்டவுன் உருவாகும் சூழலும் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளது உலக மக்களிடையே அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இந்தியாவில் எரிபொருள் அவசரநிலை (Fuel Rationing) அறிவிக்கப்படும் சூழல் தற்போது இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
வதந்திகள்: சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கையிருப்பு: உலகளாவிய எண்ணெய் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, இந்தியப் பங்கு (India Stock) குறைந்தால் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடுகள் தேவைப்படும். ஆனால், தற்போது இந்தியாவில் போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளது.