

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலையில், நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இருப்பினும் இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், தனது முதல் பிரச்சாரத்தை பெரம்பூர் தொகுதியில் இருந்தே தொடங்குகிறார் தலைவர் விஜய்.
இதன்படி நாளை மறுதினம் மார்ச் 28ஆம் தேதி 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பிரச்சாரம் தொடர்பான அனுமதி கோரி அளிக்கப்பட்ட கடிதத்தில், ஒவ்வொரு பகுதியிலும் 3,000 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் தகவல் வெளியாகி உள்ளது.
நாளை மறுதனம் நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில் காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.
இதனை அடுத்து மதியம் 1 மணிக்கு கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், மதியம் 2 மணிக்கு வில்லிவாக்கம் தொகுதியிலும், மதியம் 3 மணிக்கு அண்ணாநகர் தொகுதியிலும், மதியம் 4 மணிக்கு விருகம்பாக்கம் தொகுதியிலும் தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
ஒரே நாளில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதால், தொண்டர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை ஒவ்வொரு தொகுதியிலும் 3,000 பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு பணிகளில் தவெக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
விஜய்யின் அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் தொடங்க இருக்கும் சூழலில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். தற்போதைய அரசியல் விதிமுறைகள் பற்றி முதல்வரிடம் கலந்தாலோசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கவும் அவர் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், அதற்குப்பின் தற்போது தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் பயணங்களை திட்டமிட்டவர் செங்கோட்டையன். அவ்வகையில் தற்போது தவெக-வின் பிரச்சாரக் கூட்டங்களைத் திட்டமிடுவதிலும் செங்கோட்டையன் முக்கிய நபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.