மாணவர்களின் உயர்கல்வி கனவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவர்களுக்காக பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு, 2026 - 27ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடுள்ள கல்வி நிறுவனம் (100 சதவீதம் தேர்ச்சி); பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும், தமிழகத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https:// Scholarships.gov.in) கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம் யசஸ்வி (PM-YASASVI) போன்ற திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 9 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ஒரு ஆண்டுக்கு, அதிகபட்சமாக, ரூ.75,000 வரையும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரையும் மத்திய அரசு வழங்கும். இதில் 30 சதவீத இடங்கள் மாணவியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மாணவர்கள், கடந்த நிதி ஆண்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர் மரபினர் பிரிவை (DNT) சேர்ந்தவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உதவித்தொகையை பெற, 2025 - 26ம் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில், கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவியர்கள் நட்பாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு விண்ணப்பத்தினை, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தில், உதவித்தொகை பெற்ற மாணவர்கள் 2026-27ஆம் ஆண்டுக்கான புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து வரும் செப்டம்பர் 30-ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களை வரும் அக்டோபர் மாதம் 15-ம்தேதிக்குள் சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய கல்வி உதவித்தொகை வேண்டி மாணவர்கள் விண்ணப்பிக்க அவர்களுடைய ஆதார் அட்டை இணைப்பு, வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ், முந்தைய ஆண்டின் மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவரின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
தகுதியுள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (National Scholarship Portal) மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் 2026 - 27ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 தகுதியுள்ள மாணவர்களுக்கு புதிய விண்ணப்பத்திற்கான தேதி பின்னர் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.