
அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி, போப் ஆண்டவராக பொறுப்பேற்று தனது பெயரை 'போப் பிரான்சிஸ்' என்று மாற்றிக் கொண்டார். 12 ஆண்டுகள் போப் பதவியில் இருந்த அவர் நேற்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
ஒரு போப் மரணம் அடைந்து விட்டால், அவருக்கான இறுதி சடங்குகள், அடுத்து செய்ய வேண்டிய நிகழ்வுகள் அனைத்தும் நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய முறைப்படி தான் நடக்கும். போப் ஆண்டவர் இறந்தவுடன், அதனை ஒரு மருத்துவர் உறுதி செய்து போப் உதவியாளரான கேமர்லெங்கோவிடம் தெரிவிப்பார். உடனே அவர் வெள்ளியால் ஆன ஒரு சிறிய சுத்தியலை கொண்டு போப்பின் நெற்றில் தட்டி கொண்டே, போப் பெயரை 3 முறை உச்சரிப்பார். இந்த சடங்கு, போப் மரணம் அடைந்ததை உறுதி செய்வதாகும்.
அதன்பின் போப் கையில் அணிந்திருக்கும் மீனவ மோதிரம் கழற்றப்பட்டு, கேமர்லெங்கோவால் உடைக்கப்படும். 1842-ம் ஆண்டுக்கு முன்பு வரை போப் ஆண்டவர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் கடிதங்களை முத்திரையிட பயன்படுத்தப்பட்டது. எனவே போப் இறந்தவுடன் அந்த மோதிரம் உடைக்கும் பழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது.
பின்னர் போப் உடல், உப்பு மற்றும் சில ரசாயனங்கள் தடவி பாரம்பரிய முறையில் பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. தொடர்ந்து வெள்ளை ஆடைகள் அணிவிக்கப்பட்டு, துத்தநாகத்தால் முலாம் பூசப்பட்ட ஒரு மரப்பெட்டியில் போப் உடல் வைக்கப்படும். பின்னர் இது அவரது அரண்மனையான அப்போஸ்டோலிக்கில் வைக்கப்பட்டு, பின்னர் புனித பீட்டர் பசிலிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும். ஆனால் போப் பிரான்சிஸ், இந்த ஆடம்பரங்களை தவிர்த்து தனது அவரது விருப்பப்படியேகினை எளிமைப்படுத்த வேண்டும் என்று 2023-ம் ஆண்டே கூறி விட்டார்.
அதன்படி அவரது உடல் நேரடியாக புனித பீட்டர் பசிலிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், பின்னர் வழக்கமாக அடக்கம் செய்யும் போப் கல்லறைகளுக்கு பதிலாக புனித சான்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு, 3 சவப்பெட்டிகளுக்குள் வைக்கப்படும் நடைமுறைக்கு பதில் தனது உடலை ஒரு சவப்பெட்டிக்குள் மட்டும் வைக்க வேண்டும் என்றும் கூறிவிட்டார். போப் இறுதி சடங்கு, கார்டினல்கள் கல்லூரியின் டீன் தலைமையில் நடத்தப்படும்.
தனது இறுதி சடங்கு கண்ணியத்துடன், ஒரு சாதாரண கிறிஸ்தவரை போலவே நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் ‘’ரோம் நகரின் பிஷப், ஒரு போதகர் மற்றும் சீடர் தான். இந்த உலகின் சக்திவாய்ந்த மனிதர் அல்ல” என்று தெளிவாக கூறி விட்டு சென்று இருக்கிறார்.
போப் ஆண்டவர் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி இறுதி சடங்குக்கு முந்தைய நாள் இரவு மூடப்படும். அப்போது அவரது முகம் வெள்ளை பட்டுத் திரையால் மறைக்கப்பட்டு, அந்த சவப்பெட்டியில் போப் காலத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் ரோஜிட்டோ என்ற சுருள் அல்லது புத்தக வடிவில் ஒரு ஆவணம் வைக்கப்படும். ரோஜிட்டோ என்பது லத்தீன் மொழியில் கையால் எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட ஆவணம் ஆகும். இது மறைந்த போப்பின் பிறப்பு, வளர்ப்பு, மற்றும் பிஷப் பணி, கார்டினல் பதவி, போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் அவரது மரணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்கள் சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு போப்பின் சவப்பெட்டியிலும் ரோஜிட்டோ நிச்சயம் இருக்கும். இது பல நூற்றாண்டு மரபு மற்றும் மரியாதை நிறைந்த ஒரு ஆவணமாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.