

இன்றைய காலகட்டத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று யோசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சந்தையில் பல முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், சிலவற்றில் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதலீடுகள் மூலம் நிலையான வருமானம் (Fixed Income) பெறுவது என்பது உங்கள் மூலதனத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து வருமானத்தைப் பெறுவதாகும்.
அதன்படி, பெரும்பாலான மக்கள், தங்கள் கடுமையான உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்திற்கு பாதுகாப்பும் உறுதியான வருமானமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நம்பகமான முதலீட்டு வாய்ப்புகளைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். இதன் விளைவாக, வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலகங்கள் (Post Office) வழங்கும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்திய அஞ்சலகங்கள் (Post Office) சாமானிய மக்களின் முதலீட்டுத் தேவைகளுக்காகவும், எதிர்காலப் பாதுகாப்புக்காகவும் மத்திய அரசின் உத்தரவாதத்துடன் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இந்திய போஸ்ட் ஆபீஸ் அனைவருக்கு ஏற்ற பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கிராமப்புற மக்களுக்காக பிரபலமானதாக கிராம சுரக்ஷா யோஜனா உள்ளது.
கிராம சுரக்ஷா யோஜனா என்பது இந்திய போஸ்ட் ஆபீஸ் மூலம் கிராமப்புற மக்களுக்காக வழங்கப்படும் ஒரு முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும் (RPLI). சேமிப்புடன் சேர்த்து ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பையும் வழங்கும் இந்தத் திட்டம், கிராமப்புற மக்களுக்காகவே பிரத்யேகமாக 1995-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாலிசிதாரர்களுக்குப் பாதுகாப்பையும் சேமிப்பையும் ஒருங்கே வழங்குகிறது. இது கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கட்டுப்படியான பிரீமியத்தில் நீண்டகால நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் ஆபீஸில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாக கிராம சுரக்ஷா யோஜனா செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் 50 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமாக, மெச்சூரிட்டியாக ரூ. 35,00,000 தொகையை முதலீட்டாளர் பெறலாம்.
முக்கிய அம்சங்கள் :
தகுதி: 19 முதல் 55 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
காப்பீட்டுத் தொகை: குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்யலாம்.
சேமிப்பு மற்றும் பாதுகாப்பு: இந்த திட்டத்தில் தோராயமாக தினமும் ஐம்பது ரூபாய் வீதம் மாதந்தோறும் ரூ.1,500 ஒருவர் சேமிப்பதன் மூலம் முதிர்வு காலத்தில் போனஸுடன் சேர்த்து ரூ.35 லட்சம் வரை ரிட்டனாக பெற முடியும். உதாரணமாக, 55 வயதில் முதிர்வடைந்தால் சுமார் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் ரூ.34.60 லட்சமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரீமியம் செலுத்தும் காலம்: கிராம சுரக்ஷா யோஜனாவில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
ஒருவேளை பிரீமியம் செலுத்தத் தவறினால், அபராதம் இன்றிச் செலுத்த 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்படுகிறது. இது பாலிசிதாரர்களுக்கு ஒரு பெரிய சௌகரியம்.
முதிர்வு வயது: பாலிசிதாரர் 80 வயதை எட்டும்போது திரட்டப்பட்ட போனஸுடன் மொத்த பாலிசி தொகையும் சரண்டர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள் இறப்பு நேர்ந்தால், நாமினிக்குத் தொகை கிடைக்கும்.
இதர வசதிகள்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதியும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியைச் சரணடையும் (Surrender) வசதியும் உண்டு. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இதை எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் திட்டமாக மாற்றிக்கொள்ளலாம்.
நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொாகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெற முடியும். மேலும், முதிர்வுத் தொகைகக்கும் பிரிவு 10(10D)-ன் கீழ் வரி விலக்கு உண்டு. இந்தியாவில் நீங்கள் எந்த ஊருக்கு இடம்பெயர்ந்தாலும், உங்கள் பாலிசியை நாட்டின் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திற்கும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முதிர்வுத் தொகை என்பது ஒரு உதாரணக் கணக்கீடு மட்டுமே; இது உங்களது வயது, காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் விகிதத்தைப் பொறுத்து மாறுபடும்.
எனவே, முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வீட்டின் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸை அணுகி முழு விவரங்களையும் உறுதி செய்துகொண்டு அதன்பின்னர் இந்த திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது.