

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் (Post Office Savings Schemes) இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட, அதிக வட்டி மற்றும் வரிச் சலுகை கொண்ட சிறந்த முதலீட்டுத் தேர்வுகளாகும். இந்தியாவில் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை, ஆண் - பெண் என அனைவருக்குமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. தபால் துறையில் சேமிப்பு கணக்குகள் மற்றும் அரசு ஆதரவு பெற்ற பல பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இவை நிலையான வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களை பொருத்தவரை, பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானம் என்பதால், பல கோடி இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளது என்றே சொல்லாம்.
எனவே எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுடைய பொருளாதார அடித்தளத்தை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நிறையப் பேர் சேமிப்புத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் சாமானிய மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு பல சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF) திட்டம் என்பது மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பான நீண்டகால சேமிப்பு மற்றும் வரிச் சேமிப்புத் திட்டமாகும்.
பிரபலமான PPF சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில், வருடத்திற்கு ஒரு முறையாவது பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், உங்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக அல்லது 12 தவணைகள் வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் PPF திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் மற்றும் அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
PPF திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 50,000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வடையும்போது, உங்கள் முதலீடான ரூ.7,50,000 மற்றும் வட்டியாக ரூ. 6,06,070 உட்பட மொத்தம் ரூ. 13,56,070 பெறுவீர்கள்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
* ஆண்டுக்கு 7.1% வழங்கப்படுகிறது (ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு கூட்டப்படுகிறது).
* இத்திட்டத்தின் (PPF திட்டம்) முதிவுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகள் பல தொகுதிகளாக முதலீட்டை (Block of 5 years) நீட்டிக்கலாம்.
* இது ஒரு EEE (Exempt-Exempt-Exempt) வகைத் திட்டமாகும். அதாவது முதலீடு செய்யும் தொகை, கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றும் முழு வரிவிலக்கு பெற்றவை.
* இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவெனில் கணக்கு தொடங்கிய 3-வது நிதியாண்டில் இருந்து மீதித் தொகையின் அடிப்படையில் கடன் பெறலாம்.
* 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்த பிறகு குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி பணத்தை (Withdrawal) பாதியாக எடுக்கலாம். அதாவது, கடுமையான நோய், குழந்தைகளின் கல்வி போன்ற சில சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே இதிலிருந்து பணத்தை எடுக்க முடியும்
* ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் கணக்கு மூடப்படும். ஆனால், அபராதம் செலுத்துவதன் மூலம் அதை மீண்டும் செயல்படுத்த முடியும்.
PPF திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை,
பான் அட்டை (PAN),
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,
முகவரிச் சான்று
அருகில் உள்ள India Post அஞ்சலக அலுவலகத்திற்குச் சென்று PPF கணக்கிற்கான படிவத்தைப் பெறவும் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து நிரப்பி KYC ஆவணங்களுடன் (ஆதார், பான் கார்டு) இக்கணக்கைத் தொடங்கலாம்.