

இந்தியாவில் செஸ் விளையாட்டு போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தி வருகின்றனர். அவ்வகையில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாம்பியன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் பிரத்யானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். கிராண்ட் செஸ் டூரில் கடந்த வருடம் சாம்பியன் பட்டத்தை வென்ற அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை இறுதிப்போட்டியில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
தமிழ்நாட்டில் இருந்து உலக செஸ் அரங்கில் பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் ரோஹித் கிருஷ்ணா உள்ளிட்ட செஸ் வீரர்கள் தொடர்ந்தே சாதனைப் படைத்து வருகின்றனர்.
இந்தியாவில் செஸ் விளையாட்டு போட்டி என்றாலே தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் என்பவர் தான் முதலில் நினைவுக்கு வருவார். ஏனெனில் உலக அளவில் பல சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
அவருக்குப் பிறகு செஸ் விளையாட்டில் சாதனை படைக்கும் பல இளம் வீரர்களை இந்தியா கண்டெடுத்துள்ளது. அதிலும் தற்போது இந்தியாவில் சிறந்து விளங்கும் செஸ் வீரர்கள் அனைவருமே இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் சாதனை படைத்து வரும் பெரும்பாலான செஸ் வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து உதயமாகி இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் கிராண்ட் செஸ் டூர் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இந்தத் தொடரின் கிளாசிக்கல், ராபிட் மற்றும் பிளிட்ஸ் ஆகிய 3 பிரிவுகளிலும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்யானந்தா அபார வெற்றியைப் பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தத் தொடரில் செஸ் உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார் பிரக்ஞானந்தா. உலகளாவிய செஸ் விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, சர்வதேச அளவில் மதிப்பு மிக்க வீரராக திகழ்கிறார் பிரக்ஞானந்தா.
‘கிராண்ட் செஸ் டூர்’ போன்ற பல தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி, சாம்பியன் பட்டம் வென்ற இளம் இந்திய செஸ் வீரர்களில் சாதனை மேல் சாதனைகளைப் படைத்து வருகிறார் பிரக்ஞானந்தா.
கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. போட்டி தொடங்கியதும் தொடக்கத்தில் பின்தங்கிய பிரக்ஞானந்தா, பிறகு மீண்டு வந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியனை வென்று, புதிய சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா.
கிராண்ட் செஸ் டூரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரூ.1.91 கோடி பரிசுத் தொகை பிரக்ஞானந்தாவுக்கு வழங்கப்பட்டது.
உலகத் தரம் வாய்ந்த செஸ் விளையாட்டு அரங்கில், நெருக்கடியான சூழலில் மீண்டு வந்து வெற்றி பெறும் யுக்திகளை கொண்டிருப்பதால் தான், சர்வதேச அளவில் இந்தியாவின் இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார் பிரக்ஞானந்தா.