

தமிழகத்தில் தனியார் பால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஆரோக்கிய பாலின் விலை உயர்ந்ததால், அதை தொடர்ந்து தற்போது மற்ற தனியா நிறுவனங்களின் பால் விலையும் உயர்த்தி உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தி உள்ளன. இது தொடர்ந்து மற்ற பால் பொருட்களின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் தான் தமிழகத்தின் முக்கிய பால் நிறுவனமான ஆரோக்கியா, தனது பால் மற்றும் தயிர் விலையை 4 ரூபாய் வரை உயர்த்தியது. இதை அப்படியே பின் தொடர்ந்து மற்ற தனியார் நிறுவனங்களான திருமலா , ஹெரிடேஜ் , சீனிவாசா , அமிா்தா, வேதா, சன், ராஜ் , வல்லபா , ஜெர்சி, டொட்லா , மற்றும் சக்ரா உள்ளிட்ட பல தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் திடீர் விலை உயர்வை அறிவித்துள்ளன.
இந்த பால் விலை உயர்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ₹80 வரை உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையின் படி "ஆந்திராவில் பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் உற்பத்தி சரிவு தான், தமிழகத்தில் பால் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆந்திராவை சேர்ந்த நிறுவனங்கள் பெருமளவில் கோலோச்சி வருகின்றன. தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்வதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.
சமீப காலமாக பால் உற்பத்தி பற்றி குறைந்து வருவதாலும், பால் பண்ணைகளின் செலவுகள் அதிகரிப்பதாலும் , வறட்சி உள்ளிட்ட காரணங்களினால் தீவனங்கள் விலை உயர்ந்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பால் விலை உயர்ந்து கொண்டே வந்தாலும், முகவர்களின் கமிஷன் மட்டும் உயர்த்தப்படாமல் இருக்கிறது, அவர்களுக்கு ஊக்கத் தொகை தருவதற்கு எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை. இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக பாலின் விலை லிட்டருக்கு ₹6 வரை அதிகரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு காரணங்களை கூறி, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்த்தினாலும் கூட முகவர்களின் செலவினங்களை, தனியார் நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினர். தொடர்ச்சியாக பால் விலை உயர்ந்தாலும் முகர்வர்களுக்கு ஊக்கத் தொகையும், கமிஷன் தொகையும் உயர்த்தி வழங்கப்படுவது இல்லை. பால் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதை போல் தான், முகர்வர்களுக்கும் வாடகை உயர்வு, மின்சார விலை உயர்வு , போக்குவரத்து செலவின உயர்வு , சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் இருப்பதாக பொன்னுசாமி கூறுகிறார்.
தனியார் நிறுவனம் பால் உயர்வினால் ,அரசு நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஆவின் பாலுக்கு தமிழக மக்களிடம் நல்ல பெயர் இருந்தாலும் போதுமான அளவில் அவை கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதே நேரம் தனியார் நிறுவன விலை உயர்வை தொடர்ந்து அரசு நிறுவனமும் பால் விலையை உயர்த்தி விடுமோ ? என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது. தொடரும் பால் விலை உயர்வுகள் , டீக்கடை , ஸ்வீட் ஸ்டால் , ஹோட்டல்கள் வரையில் விலைப் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். அத்துடன் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தும்.