

சமூக ஊடகங்களின் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முகம் தெரியாத சில மோசடி நபர்கள், பொதுமக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டி வருகின்றனர். அரசு மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு இல்லாதவரை சைபர் குற்றங்களைத் தடுப்பது சாத்தியமாகாது.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருப்பதால், இணைய வசதியைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்கள் தான் இன்று பலருக்கும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. ஆனால் இதே சமூக வலைதளத்தில் தான், பலரும் யாரென்றே தெரியாத நபர்களை நம்பி பணத்தை இழந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் கவர்ச்சியான விளம்பரங்கள் பார்வையாளர்களை கவர்வதுண்டு. குறிப்பாக குறைந்த முதலீட்டில் அதிக லாபம் போன்ற நிதி திட்டங்கள், பகுதி நேர வேலை மற்றும் வீட்டிலிருந்தே வேலை என பொதுமக்களை மிக எளிதாக நம்ப வைத்து விடுகின்றனர் மோசடி நபர்கள். பலரும் இது மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை ஏமாந்ததுண்டு. இனி பொதுமக்கள் அனைவரும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேலைவாய்ப்பு மோசடிகள், போலியான முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் சதித் திட்டங்களுக்கு கவர்ச்சியான போலி விளம்பரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணைக் கவரும் இந்த போலி விளம்பரங்களை நம்பி நாட்டில் பணத்தை இழந்தவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஆகையால் சமூக வலைத்தளங்களில் வரும் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட போலியான விளம்பரங்களுக்கு பதில் அளிப்பதையும், அந்த விளம்பரங்களில் உள்ள தொடர்பு எண்ணைத் தொடர்பு கொள்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்களைப் பார்த்தாலோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, தேசிய சைபர் கிரைம் புகாரளிப்பு போர்டல் www.cybercrime.gov.in மூலம் புகார் அளிக்கலாம். மேலும் 1930 இவவச ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொண்டும் புகார் கொடுக்கலாம்.
ஏற்கனவே இந்த எண்ணிற்கு வந்த புகார்களின் மூலம், பலருக்கும் கணிசமான தொகை மீட்டுத் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பதற்கு ‘CYBERDOST’ என்ற அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கை, அனைத்து சமூக ஊடகங்களிலும் பின் தொடருங்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்களுக்கு முதலீட்டுத் திட்டங்களில் விருப்பமிருந்தால், பாதுகாப்பான வங்கி அல்லது அஞ்சல் அலுவலக முதலீட்டுத் திட்டங்களை நேரில் சென்று மேற்கொள்ளலாம். பகுதி நேர வேலை வாய்ப்புகளை தேடும் நபர்கள், நம்பகமான நிறுவனங்களையோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள நிறுவனங்களிலோ வேலை தேட முயற்சிக்கலாம். இதனை தவிர்த்து சமூக வலைதள விளம்பரங்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்.